Sunday, 31 December 2023

தமிழரின் நடுவரை கணக்கீடு

நேரம் உலகம் முழுவதும்  ஒரே அளவாக இருப்பதில்லை, நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தற்போது 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Meridian) யைக் கொண்டு பூமியில் உள்ள நாடுகளின் நேரங்கள் அளக்கப்படுகின்றன. கோளவடிவில் உள்ள பூமியின் மேலுள்ள நாடுகள் ஒரு செவ்வகத்தில் பொருத்தப்படுகின்றன. இதில் செவ்வகத்தின் நீளம் அகலத்தை போல் இருமடங்காக இருக்கும். இச்செவ்வகத்தின் நடுவில் கிடைமட்டமாக போடப்படும் கோடு நிலநடுக்கோடாகும். இக்கோடு இரு சம பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் பூஜ்ஜியத்தில் இருந்து பதினொன்று வரை பன்னிரண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன. வலப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து +11 வரையிலும், இடப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து -11 வரையும் எண்ணிடப்படுகின்றன. இப்பள்ளிகளின் வழியே செல்லும் குத்துக்கோடுகள் (உண்மையில் வளை கோடுகள்) நெடுவரைகள் (Meridians) ஆகும். நடுவில் உள்ள பூஜ்ஜியத்தின் வழியே செல்லும் நெடுவரை முதன்மை நெடுவரை (Prime Meridian) அல்லது நடுவரை என அழைக்கப்படுகிறது. இக்கோடு இங்கிலாந்தின் கிரீன்விச் வழியே செல்வதால் இதை 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Prime Meridian) என அழைக்கப்படுகிறது.

 இந்த நடுவரையிலிருந்து உலகின் அனைத்து பகுதிகளுக்குமான நேரங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த நடுவரை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்கா வழியே செல்கிறது. தற்போது அணுக்கடிகாரம்  கொண்டு நுட்பமாகக் காலத்தைக் கூறும் முறையான UTC- Universal Time Coordinate முறையைப் பயன்படுத்துகிறோம். முதன்மை நடுவரையின் வலப்புறத்தில் இருக்கும் நெடுவரையில் நேரங்கள் கூடிக்கொண்டேவரும். முதன்மை நடுவரையில் மணி நடுஇரவு 12 ஆக இருக்கும்போது வலப்புறம் முதல் நெடுவரையில் காலை ஒரு மணியாகவும், இரண்டாம் நடுவரையில் காலை இரண்டு மணியாகவும் இருக்கும். இது தொடர்ந்து அதிகரித்து பதினொன்று  மணியில் முடியும். இடப்புறம் உள்ள நெடுவரைகளில் முதல் நெடுவரையில் இரவு 11 மணியாகவும், இரண்டாவது நெடுவரையில் இரவு10 மணியாகவும் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். ஒரு நாடு எந்த நெடுவரையில் அமைகிறதோ அதைப் பொறுத்து அந்நாட்டின் நேரம் கூறப்படும். எடுத்துக்காட்டாக, இந்தியா ஐந்தாவது, ஆறாவது நெடுவரைகளில் அமைந்துள்ளது. இது ஐந்தரையாக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தியாவின் நேரம் UTC+5:30 எனக் கணக்கிடப்படுகிறது. இதையே இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் (IST) என்கிறோம். அதாவது கிரீன்விச்சில் நடுஇரவு 12 மணியளவில் இந்தியாவில் காலை ஐந்து முப்பது மணி. இதுபோல முதன்மை நடுவரைக்கு இடப்புறம் உள்ள நாடுகளில் நேரம் குறைத்துக் கணக்கிடப்படுகிறது. இம்முறை எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது?  உலகம் முழுக்க ஒரே முறையைக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் 1884 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைவரும் பொதுவான நடுவரையைப் பயன்படுத்துவது என்றும் அது இங்கிலாந்தின் 'இராயல் அப்சர்வேட்டரி' வழியே செல்லும் கோடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருபத்து ஐந்து நாடுகள் கலந்து கொண்டதில் இருபத்து இரண்டு நாடுகள் ஒப்புதல் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் நாடு ஏற்றுக்கொள்ளாமல் தனது நடுவரையையே தொடர்ந்து பயன்படுத்திது. பின்னர் 1911 ஆம் ஆண்டிலிருந்து அந்நாடும் பொதுவான நடுவரையை ஏற்றுக்கொண்டது. 

     பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இவ்வாறு நெடுவரைகளைக் கொண்டு காலம் கணிக்கும் முறையை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெடுவரைகளைக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளின் நேரங்களையும் அளக்கும் முறையை தமிழர்கள் வகுத்திருந்தனர். மிகப்பரந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு இடத்தின் நேரங்களை ஏன் கணக்கிட்டனர்? உலகின் மற்ற பகுதிகளுக்கு கடலோடிகளாகத் தமிழ் வணிகர்கள் கப்பலில் சென்று வணிகம் செய்து வந்தனர். எனவே அவர்களுக்கு மற்ற நாடுகளுக்கான நேரம் கணிக்கும் முறைத் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் நெடுவரைக் கணக்கீட்டு முறையை தங்களுக்கென உருவாக்கிக் கொண்டனர். இம்முறையை எப்படி உருவாக்கினர் என்பதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

     இதற்கானச் சான்றுகள் தமிழ் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) உள்ளன. பஞ்சாங்கம் என்றாலே மூட நம்பிக்கைகள் அடங்கிய புத்தம் என்று பலர் நினைப்பர். பிற்காலத்தில் நுழைந்த சடங்குகள், நோன்புகள், திருவிழாக்கள் போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் அதில் வானியல் குறிப்புகள் மிஞ்சும். அவற்றில் நாம் வரலாற்றுக் குறிப்புகளைக் கூட தேடலாம்.  அந்த வகையில் 'மநோன்மணி விலாச சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில்' ஒரு குறிப்புக் காணப்படுகிறது. இந்த பஞ்சாங்கம் மத்திய ஸ்தானத்திற்கு கணிக்கப்பட்டதாகவும், தஞ்சாவூர் பலசாயை அங்குலம் 2, வியங்குலம் 17, இதற்கு அஷஜ்யா 643 இக்கு அஷாம்சம் 10, பாகை 47 கலை. லங்கோஜ்யையினி மத்ய ரேகையிலிருந்து ரேகாந்திரம் 34 வினாடிக்கு யோஜனை 46 கிழக்கு.  (அட்சம் – அட்சரேகை - Latitude,  ரேகாந்திரம் - தீர்க்ரேகை - Longitude, பலசாயை - விஷுதின சூரியோச்ச சமயம் 12 அங்குல சங்குவின் நிழலின் அங்குலமும் சதாம்சமும்)

     அதாவது பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைகளை அக்கால அலகுகள் கொண்டு சொல்கிறார்கள். இன்று அட்சரேகை, தீர்க்க ரேகைகளை கூறும்போது பாகை (Degree) நிமிடம் (Minute) வினாடி (Second) எனக்கூறுவதைப்போல வேறு அலகுகளை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இன்று ஒருவருடைய இருப்பிடத்தைக் குறிக்கும்போது அட்சரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு, தீர்க்க ரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு எனக்குறிப்பதைப் போல இங்கு குறிப்பிடுகிறார்கள். இதில் "லங்கோஜ்யையினி மத்திய ரேகைக்கு" கிழக்கே தஞ்சாவூர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் லங்கோஜ்யையினி மத்திய ரேகை என குறிக்கப்படுவது அக்காலத்தில் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய நடுவரையாகும். இதிலிருந்து இன்றைய மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜையினியையும் இலங்கையையும் இணைக்கும் குத்துக்கோடு என புரிந்து கொள்ளலாம். ஆனால் உஜ்ஜையினியையும் இன்றைய இலங்கையையும் இணைக்கும் கோடு செங்குத்தாக இல்லை. எனவே, அங்கே குறிக்கப்படுவது இன்றைய இலங்கை அல்ல உஜ்ஜையினிக்கு நேர்கீழே இலங்கை என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஏதோ ஒரு நிலப்பரப்பாகத்தான் இருக்க முடியும்.

     உஜ்ஜையினி 23.17 பாகை வடக்கு அட்சரேகை, 75.76 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் கடகரேகையின் மேல் அமைந்துள்ள நகரமாகும். இந்த உஜ்ஜையினியையும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு நிலப்பரப்பையும் இணைக்கும் ஒரு கோடே இந்த லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை என எளிதில் புரிந்துகொள்ளலாம். உஜ்ஜையினி நகரம் கடகரேகையின் மீது அமைந்துள்ள நகரமாகும், இதன் எதிர்ப்புறம் நிலநடுக்கோட்டின் மேலே லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையை இணைக்க ஒரு  நிலப்பரப்பு உண்மையில் இருந்ததா எனில் ஆம். அது தற்போது கடலில் அமிழ்ந்துள்ளது. நெடுவரை வகுக்கப்பட்ட காலத்தில் அந்த நிலப்பகுதி தீவாக இருந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் தரவுகள் கிடைத்துள்ளன.

     நிலநடுக்கோட்டின் மேலிருந்த அப்பகுதி இன்றைய மாலத்தீவுக்கு அருகே உள்ளது. தற்போதைய மாலத்தீவு நிலநடுக்கோட்டின் மேல் இல்லை, ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட மாலத்தீவின் சில தீவுகள் நிலநடுக்கோட்டின் மீது அமைந்திருந்தன. இதை ஐரோப்பிய மாலுமிகளின் வரைபடங்கள் உறுதி செய்கின்றன. சான்றாக 1676 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய மாலுமிகள் பயன்படுத்திய வரைபடத்தைக் கூறலாம். 500 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கோட்டின் மேலே இருந்த சில தீவுகள் இன்று கடல் நீரின் அடியில் உள்ளன. இதில் ஒரு தீவைதான் லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினியுடன் இணைக்கிறது. தற்போதைய மாலத்தீவு கடல் மட்டத்திற்கு மேலே சிறிதளவே உயரமாக உள்ளது. அதாவது கடல் மட்டம் மேலும் சிறிது உயர்ந்தாலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலப்பகுதிகள் கடல் மட்டத்தின் உயர்வால் நீரில் மூழ்கிவிட்டிருக்கின்றன. லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையுடன் இணையும் அந்த நிலப்பரப்பே பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் 'நிரட்ச்சலங்கை'. நிராசை என்றால் ஆசையில்லாத எனப் பொருள். நிர்-பூஜ்ஜியம், நிரட்சம் என்றால் அட்ச்சம் (Latitude) பூஜ்ஜியமான என்று பொருள். அதாவது, நிரட்ச்சலங்கை என்றால் நிலநடுக்கோட்டில் பூஜ்ஜிய அட்ச்சத்தை (Latitude) உடைய இலங்கை என்று பொருள். இதுவே தென்னிலங்கை என வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கே இருந்த நிலப்பரப்பைக் குறித்துப் பல தரவுகள் கிடைக்கின்றன. மேலும் அதைக் குறிப்பிடுகிறவர்கள் அந்த நிலப்பரப்பை இலங்கை (சிலோன்) என்று புரிந்து வைத்திருந்தனர். த சில்ட்ரன் ஆப் மூ (The Children of Mu) என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் சர்ச்வேர்டு(James Churchward) அவர்கள் இந்த நிலப்பரப்பை வரைபடமாக வரைந்துள்ளார். 1929 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடம் நாம் கூறும் நிரட்சலங்கையை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தாலமியின் வரைபடத்தில் இலங்கை நிலநடுக்கோட்டில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தாலமி இலங்கையை இருபது மடங்கு பெரிதாகத் தவறாக வரைந்துவிட்டார் என்ற கூற்றையும், நிலநடுக்கோட்டின் மேல் ஒரு நிலப்பரப்பு இருந்தது என்ற கூற்றையும் இணைத்து நோக்கினால் நிலநடுக்கோட்டின் மேலே நிரட்ச்சலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இருந்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். தாலமியும் போர்ச்சுகீசியர்களும் தங்கள் வரைபடத்தில் நிலநடுக்கோட்டின் மேல் அமைந்துள்ள நிலப்பரப்பை தெளிவாகவே குறித்து வைத்துள்ளனர். அந்நிலப்பரப்பு இன்றைய இலங்கை அல்ல, ஏனெனில் அது நிலநடுக்கோட்டிற்கு மேலே தொலைவில் உள்ளது.

     இந்த நிரட்ச்சலங்கைக்குக் கீழே லங்கோஜையினி மத்திய ரேகையை தொடர்ந்து மகரத் திருப்பத்தில் ஏதேனும் நிலப்பரப்பை இணைக்கிறதா எனத் தேடினால், அவ்வாறு ஒரு நிலப்பரப்பு தற்போது இல்லை. மேலும், அங்கு கடலின் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மகரத் திருப்பத்தில் அத்தகைய நிலப்பரப்பு இல்லை என்பது நமது முடிவாகும். ஆனால், மேற்கண்ட லங்கோஜையினி மத்திய ரேகையைப் பற்றி நமக்கு தரவுகளைக் கொடுத்த திரு. வெள்உவன் ஐயா அவர்கள் மகரத் திருப்பத்தில் ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக வாதிடுகிறார். மேலும் அந்த நிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதும் அவரின் வாதம்.

     பஞ்சாங்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வானியல் குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள். இதில் உள்ள குறிப்புகளை இன்றைய கணக்கீடுகளின் மூலம் ஆய்வதன் மூலம் நாம் பல செய்திகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் லங்கோஜையினி மத்திய ரேகை தற்போது எங்கே உள்ளது என இன்றைய காலக் கணக்கீட்டின்படி அறிந்து கொள்வோமா? தேசாந்ர சமஸ்காரத்துடன் கூடிய சித்தாந்த திருக்கணிதம் என்னும் சாதக நூலில் லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து பல ஊர்களின் தொலைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருச்சியை எடுத்துக்கொள்வோம். திருச்சி லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து கிழக்கே 560 மைல் தொலைவில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது திருச்சியில் இருந்து 560 மைல்  (901 கிலோ மீட்டர்) மேற்கே இந்த ரேகை உள்ளது. மேலும் இந்த மத்திய ரேகை உஜ்ஜயினியையும் நிரட்ச்சலங்கையையும் இணைப்பதாகும். அதாவது, தீர்க்க ரேகை 75 பாகை வழியே செல்கிறது. இந்த ரேகை திருச்சியில் இருந்து மேற்கே எந்த பாகையில் அமைந்துள்ளது எனக் கணக்கிடுவோம்.

 

நிலநடுக்கோட்டின் நீளம் 

   400,75 கி.மீ   (பூமியின் சுற்றளவு)

360° பாகைக்கு         

   400,75 கி.மீ

1° பாகைக்கு          

  40075÷360 = 111.32 கி.மீ

அதாவது

111.32 கி.மீ           

 1° பாகை

1 கி.மீ         

 1÷111.32 ° பாகை

901 கி.மீ         

  901/111.32 = 8° பாகை (தோராயமாக)

                                

நெடுவரையை நாம் நேர்கோடாகக் கருதிக் கணக்கிட்டு உள்ளோம். ஆனால், அவை வளைகோடுகள் எனவே 8° பாகையில் இருந்து சிறிது வேறுபாடுகள் இருக்கும்.     மேற்கண்ட கணக்கீட்டின்படி மத்திய ரேகை திருச்சிக்கு மேற்கே 8° பாகையில் செல்கிறது என தெரிகிறது. திருச்சியின் தீர்க்கரேகை 78° பாகை. எனவே இந்த மத்திய ரேகை தற்போது 78°-8°=70° பாகையில் செல்லவேண்டும். லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினி வழியே செல்வதால் உஜ்ஜையினியின் தீர்க்க ரேகையான 73°பாகை வரவேண்டும். நமக்கு 70° என வருகிறது. தீர்க்க ரேகைகள் வளைகோடுகளாகவும் பழைய குறிப்புகளில் ஊரின் பெயர் மட்டுமே உள்ளது மேலும், அந்தக் காலகட்டத்தில் அவ்வூர் சற்றுத் தள்ளிக் கூட இருந்திருக்கலாம். எனவே இத்தகைய கணக்கீடுகளில் 3° பாகை பெரிய வேறுபாடு அல்ல. முடிவாக இதை இப்படிக் கூறலாம் லங்கோஜையினி மத்திய ரேகை இன்றைய தீர்க்க ரேகை +70° இக்கும் +75° இக்கும் இடையே உள்ளது. இந்த ரேகையின் தென் முனையே நிரட்சலங்கை. ராபர்ட் சீவல் (Robert Sewell) என்பவரால் எழுதப்பட்ட த இந்தியன் காலண்டர் (The Indian Calendar) என்ற புத்தகத்தில் பூஜ்ஜிய அட்சரேகையில் உள்ள நிலப்பகுதியில் இருந்து உஜ்ஜைனியை சேர்க்கும் நெடுவரையைப் பற்றிய குறிப்பு உள்ளது.

(...  Here Lanka is pot es but a place supposed to be on the equator, or in lat. 0° 0 0 on the meridian of Ujjain, or longitude 75 46. It is of great importance to know the exact cast longitude of Ujjain, since upon it depends the verification of apparent phenoment throughout India. Calculation by the different. Siddhidintas can be checked by the best European science if that point can be certainly determined. The great Trigonometical Survey map makes the centre of the city 75° 49' 45" E. long, and 23° 11' 10 N. lat. But this is subject to two corrections; first, a corrention of 1' 0 to reduce the longitude to the origin of the Madras Observatory taken as 80° 17' 21",  and secondly, a farther reduction of 2' 30 to reduce it to the latest valuc, 80° 14' 51", of that Observatory, total 3' 39. This reduces the H. long, of the centre of Ujjnin city to 75° 46' 06. I take it therefore, that amidst conflicting authorities, the best of whom vary from 75° 43' to 75° 51, we may for the present accept 75° 46' as the nearest is found to exist between the new fixture and 80° 14' 51", that difference applied to 75° 40' will give the correct value of the approach to the truth. The securacy of the base, the Observatory of Madras, will before long be again tested, and whatever difference E. long, we require.  The Indian Calendar - Robert Sewell , Sankara Balakrishna Dikshit)

 

அட்ச ரேகை

தீர்க்க ரேகை

இன்றைய உஜ்ஜையினி நகரம்

 23°30' N

 73°14'E

பஞ்சாங்கங்களின்படி மத்திய ரேகை

0° - 23°30'

 70°14'E

நமது கணக்கீட்டின்படி நிரட்ச்சலங்கை

 0°

 73°14'E

 நிரட்சலங்கையின் இருப்பை மேற்கத்திய ஆய்வாளர்களின் கூற்று உறுதிச் செய்கிறது. 

 அலெக்ஸாண்டர் கோந்தரதோவ் என்ற ருஷ்ய எழுத்தாளர் தன்னுடைய ‘Riddles of three Oceans' என்ற நூலில் இலங்கையைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

     "நிலப்பரப்புகள் பற்றிய புதியகண்டுபிடிப்புகளைக் குறித்து எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் பண்டைக் கிரேக்கர்களும் ரோமர்களும் அறிந்திருந்த 'தாமிரபரணியை’ இன்றைய இலங்கை என்று நம்புகிறார்கள் ஆனால் தாமிரபரணியைப் பற்றி பல விளக்கங்கள் இன்றைய இலங்கையோடு பெரும்பாலும் பொருந்தவில்லை. மேலும் தொன்மையான குறிப்புகள் பல தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எவரொருவரும் தாமிரபரணியை இதுவரை கடல்வழியாகச் சுற்றி வந்ததாகத் தெரியவில்லையாதலால் அது ஒரு தீவாக இருக்க முடியாது. ஆனாலும் அது வேறொரு உலகத்தின் தொடக்கமாகவும் புவிக்கோளத்தின் எதிர்ப்பக்கம் வாழ்பவர்களுடைய நிலத்தின் வடக்கு விளிம்பாகவும் இருக்கலாம் என்பதாகக் கிப்பர்க்கஸ் (Hipparchus) குறிப்பிடுகிறார்.

 (...Most historians of geographical discoveries believe Ceylon to be the place that was known to the Greeks and Romans as Taprobane. But there are many features in the description of Taprobane that do correspond to what we know about Ceylon. Taprobane is mention in very old sources. Hipparchus noted that no one hade yet circumnavigated Taprobane so that it might very well have not been an island but the beginning of another world the northern edge of the lands of those living opposite....)

     தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுகிறார். இத்தீவு தென்கோளரையில் இருந்ததையே இது புரிய வைக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையோ வடக்கு அட்சரேகை 5இக்கும் 9இக்கும் இடையே அமைந்திருக்கிறது.

 (...Pliny said that on Taprobane the shadows fell to the south instead of north, and the sun rose in the left and set on the right. This means the island was in the southern Hemisphere. Yet Ceylon is situated roughly between 5 degree and 9 degree north....) “

(The riddles of three Oceans P. 169-170)

     வடஅரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று வடக்கே விழும், மேலும் சூரியன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மறையும். தென்அரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று தெற்கே விழும், மேலும் சூரியன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறையும். தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுவதிலிருந்து அது தெற்கு அரைக்கோளத்திலுள்ள நிலத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலம் நாம் கூறும் நிரட்சலங்கையை ஒட்டிய தெற்கே இருந்த நிலப்பகுதியாக இருக்கவேண்டும்.

     லங்கா என்ற சொல்லை மேலைநாட்டார் சிலோன் என்றே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனாலேயே இன்றைய இலங்கை பண்டைய ரோம கிரேக்கக் குறிப்புகளோடு பொருந்தவில்லை. அவர்களின் குறிப்புகளிலிருந்து இலங்கையைத் தாமிரபரணி (Taproboni) என்றே குறிப்பிட்டடுள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.  பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் பூஜ்யம் பாகையில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்குப் பூகோள சம ரேகை என்று தமிழ்மொழி அகராதி என்று பொருள் சொல்கிறது. (நிராசை - ஆசை இல்லாமல், அட்சம் - அட்சரேகை, நிரட்சம் - அட்சம் பூஜ்ஜியமான,  நிரட்சலங்கை - பூஜ்ஜிய அட்சரேகையில் அமைந்த இலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு). அலெக்சாண்டர் கோத்திரத்தோவ்வின் கூற்றையும் இணைத்துப் பார்க்கையில் அவர் லங்கா என குறிப்பிடுவது நிலநடுக்கோட்டின் மேலிருந்த நிரட்சலங்கை என்ற தீவையே என்றும், அது தற்போதைய மாலத்தீவுக்கு சற்று தென்கிழக்கே நிலநடுக்கோட்டின் மீது இருந்தது என்றும் முடிவுக்கு வரமுடியும்.

     இதை உறுதி செய்ய மேலும் சில தரவுகளைப் பார்ப்போம். கில்பர்ட் சிலேட்டர் (Gilbert Slater) என்னும் ஆங்கிலேயஆய்வாளர் தமிழர்களின் வானியல் அறிவை "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு (The Dravidian element in Indian culture)"என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதில் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நேரங்களைக் கணிக்க தங்களுக்கென்று தனியான நெடுவரைகளை அமைத்திருந்தனர் எனக் கூறுகிறார். மேலும் தமிழர்கள் தாங்கள் அமைத்திருந்த நெடுவரையில் வானாராய்ச்சி நிலையத்தையும் கட்டமைத்து வானாய்வு செய்துள்ளனர் என தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். 

 அப்புத்தகத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்.

             வான் மண்டலம் பன்னிரண்டு மனையகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞாயிறு ஒரு புது மனையகத்தில் புகும் நேரம் காலையாயினும் சரி, நண்பகலாயினும் சரி, இரவாயினும் சரி, அந்தக் கணத்திலேயே மாதம் பிறக்கிறது. நாட்களும் ஞாயிற்றெழுச்சியுடன் தொடங்குகிறது. ஆனால், ஞாயிற்றெழுச்சி என்பதும் இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் ஞாயிறு தோன்றும் வேளையன்று; 1 உலக நடு நேர் கோட்டில், 2 நடுநிரைகோடு' அக்கோட்டுடன் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கில் ஞாயிறெழும் வேளையாகவே அது அமைந்துள்ளது. தமிழர் தமக்கென்று வகுத்த இந்த நடுநிரைகோடு தமிழர் பண்டை வானாராய்ச்சி நிலையம் அமைந்திருந்த இடத்துக்கு நேராயிருந்ததாக அறிகிறோம்.

 [¹ Equator.  2 Meridian.]

     உலகின் இத்தனியுயர் சிறப்புக்குரிய ஆண்டுக் கணிப்புமுறை தமிழருக்கு எப்போது ஏற்பட்டது என்று எவரேனும் காலவரையறை கண்டுணர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது தனியுயர் சிறப்புடைய தென்பதும், நடை முறையில் எவ்வளவு வசதிக்கேடாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அம்முறை  இடைச் சங்கங்கள், கடைச் சங்கங்கள் இருந்து நடைபெற்ற தமிழகப் பகுதி இன்று கடலுளாழ்ந்துவிட்டது. அதில் ஒரு பண்டைத் தலைநகரமே தமிழரின் இவ்வாராய்ச்சிக்குரிய மூல இடம் என்று கருதலாம். அது பஃறுளி ஆற்றின் கரையிலிருந்த தென்மதுரை என்று கருத இடம் உண்டு. ஆண்டுத் தொகுப்பில் கணிக்கப்பட்ட நிலையில் அது குமரிமுனைக்குத் தெற்காகவும் இலங்கைக்கு மேற்காகவும் கடலில் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுவதாயுள்ளது.

 பிடிவாதமாகப் பின்பற்றப்படுகிறது என்பதும், மற்றெல்லா ஆண்டுத்தொகுப்பு முறைகளையும் விட அது துல்லியமான வானிலைக் கணிப்பைக் குறியாகக்கொண்டுள்ளது என்பதும் தனிப்படக் குறிப்பிடத்தக்கன. இந்தியாவிலேயே, திராவிடமல்லாப் பண்புகளின் தலையீடில்லாத பகுதியிலேயே - அதாவது தமிழகத்திலேயே - திராவிட அறிவுநூல்கள் முழுத் தற்சார்புடன் தொடர்ச்சியான வளர்ச்சிபெற்றிருந்தன என்பதை இது காட்டுகிறது.

     இதுவரை வேதங்களிலுள்ள திராவிட நகரங்கள், திராவிடக் கலைகள் ஆகியவை பற்றிய சில குறிப்புகள் தவிர, திராவிட நாகரிகத்தின் தொல்பழமைக்கு முடிவான சான்றாக மதிக்கக்கூடிய எதையும் நாம் குறிப்பிடவில்லை. ஆயினும் தென் இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாகரிக மையங்களுக்கும் இடையேயுள்ள தொல்பழந் சான்றுகள் ஏராளமான தொடர்புகளைப்பற்றிய ஜி. எலியட் சுமித்,' வில்ப்ரிட் எச். ஷாப்', ஜே. வில்ப்ரிட் ஜாக்ஸன்', டப்ளியூ. ஜே. பெரி' முதலிய பலரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் காணலாம். இவ்வெல்லா ஆராய்ச்சியாளர் முடிபுகளையும் பொதுமுறை வாசகர்களுக்கு எளிதாகத் திரு. பெரி “ஞாயிற்றின் சேய்கள்” என்ற தம் நூலில் தொகுத்துரைத் துள்ளார்.

[1. G. Elliot Smith, 2. Wilfrid H. Schoff, 3. J. Wilfrid Jackson,.4. W, J. Perry, 5. Logan's Classic, District Manual of Malabar.] ] “

     தமிழ்நாட்டுக்குக் கீழே நடுவரையில் தமிழர்கள் சூரியனை ஆய்வுசெய்யும் வான்ஆய்வு மையத்தை கட்டியிருந்தனர் என கில்பர்ட் சிலேட்டர் கூறுகிறார்.

நிலநடுக்கோட்டின் மீதும் நெடுவரையின் மீதும் அமைந்த பண்டைய தமிழர்களின் வான் ஆய்வு மையங்கள் நிரட்சலங்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை தற்போது எங்கேயுள்ளன என நாம் பார்க்கலாமா?

     பண்டைய தமிழர்கள் கட்டமைத்த சூரிய ஆய்வு நிலையங்கள் இன்றைய மாலத்தீவிற்கு அருகே தென்கிழக்கில் தற்போது கடலில் மூழ்கியுள்ள தீவுவுகளில் இருக்கவேண்டும்  என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ஆய்வு மையங்கள் என்றால் சூரியனின் நகர்வுகளை ஆண்டு முழுவதும் பார்ப்பதற்கு ஏதுவான கட்டட அமைப்பும், செங்குத்தாக நட்டுவைக்கப்பட்ட குச்சியின் நிழலை துல்லியமாக அளக்க ஏதுவான அமைப்புகளும் என நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்தக் கட்டட அமைப்பு சூரியனின் வட, தென் செலவுகளை துள்ளியமாகக் கணிக்க கிழக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

     இன்றைய மாலத்தீவு குமரிக் கடலில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுநாடாகும். மாலேயை தலைநகராகக் கொண்ட இந்நாடு தமிழ்நாட்டின் தென்மேற்கே நிலநடுக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது.

  "கடலுக்கு கீழ் ஒரு நீண்ட மலைத்தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப் பகுதியாக இருந்தது என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்கிறார்கள் என்பதையும், அங்கு நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அங்கு வழங்கப்படும் மொழி, கலாச்சார, வாய்மொழி, ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே கிமு 300 இக்கு முன்பே மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றனர் (மாலன், புதிய தலைமுறை, பிப்ரவரி 2012 மாதஇதழ் பக்கம் 24)."

     மாலத்தீவுகளில் தொல்பொருள் ஆய்வு ஹெச். சி. பீ. பெல் (Harry Charles Purvis Bell) என்பவர் செய்த ஆய்விலிருந்து தொடங்குகிறது. அவரது ஆய்வில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்றும், பௌத்தம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை தொடர்ந்தது என்றும் தெரியவந்தது.

     1980 இல் மாலத்தீவு அரசு தொல்பொருள் ஆய்வு செய்ய ஏயெரத்தாள் (Thor Heyerdahl) என்ற நார்வே நாட்டு ஆய்வாளருக்கு அனுமதி அளித்தது. மாலத்தீவில் இஸ்லாம், பௌத்தத்திற்கு முந்தைய கலாச்சாரம் ஒன்று அங்கிருந்ததை ஏயெரத்தாள்  கண்டுபிடித்தார். அவர் ஆய்வின்படி கி.மு. இரண்டாயிரம் காலப்பகுதியிலேயே மாலத்தீவு கடல்வழி வணிகத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அவரின் கருத்துப்படி “சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே” மாலத்தீவின் பூர்வ குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் கிழக்கு நோக்கியே உள்ளன. தீவாக இருப்பதால் கட்டிடப் பொருள்கள் தட்டுப்பாடுக் காரணமாக புதியக் கலாச்சாரங்கள் தோன்றும்போது பழையக் கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்தின் மீது புதியக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பள்ளிவாசல்கள் சூரிய வணக்கக் கோயில்கள் மீது எழுப்பப்பட்டுள்ளன என ஏயெரத்தாள்பதிவு செய்தார். 

     ஏயெரத்தாள் சூரிய வணக்கக் கோயில்கள் என்று கருதியவை பண்டைய தமிழர்களின் சூரிய ஆய்வுக் கூடங்கள் ஆகும். தீவுகளின் நடுவே கிழக்கே சூரியனின் எழுச்சியைப் பார்க்க ஏற்றவாறு அமைக்கப்பட்ட இந்த ஆய்வகங்களில் இருந்து பண்டையத் தமிழர்கள் சூரியனின் நகர்வுகளை உற்று நோக்கி, சூரியனின் வடசெலவு, தென்செலவு காலங்களை அளந்து, சூரிய நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய மாலத்தீவிற்குச் சற்றுத் தென்கிழக்கே கடல் மட்டம் குறைவாக உள்ள நிலநடுக்கோட்டின் மீது 'நிரட்சலங்கை' இருந்திருக்கிறது. தற்போதைய மாலத்தீவின் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்களைப் போல் இங்கும் சூரியஆய்வு கூடத்திற்கான கட்டுமானங்கள் கிடைக்கக்கூடும். இனிவரும் காலங்களில் அங்கு கடலாய்வு செய்தால் அத்தகையக் கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படலாம். ஏயெரத்தாளின் இந்த ஆய்வு முடிவை மற்ற ஆய்வாளர்கள்  ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சூரிய வணக்கம் செலுத்திய கடலோடிகள் என்பது வரை சரியாகப் பயணித்தவர் பின்னர் தடம் மாறிவிட்டார். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டக் கட்டிடங்களைப் பார்த்தவர் அவை சூரியனை ஆய்வுச் செய்ய ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் சூரியனை வணங்கிய மக்கள் எழுப்பியக் கட்டடங்கள் எனப் புரிந்து கொண்டார். அதனால் சூரிய வணக்கத்தைக் கொண்டிருந்த அஷ்டக்குகள், மாயன்கள் போன்றவர்களுடன் தொடர்புபடுத்தி தனது ஆய்வை வேறு திசையில் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அவரின் இந்த மிகப்பெரியக் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களின் கவனத்தைப் பெறாமல் போய்விட்டது. இப்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. எவ்வளவோ நிலப்பகுதிகள் இருந்தும் கடலின் நடுவே உள்ள சிறு தீவுகளை ஏன் பழந்தமிழர்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

             வடசெலவு, தென்செலவு ஆகிய சூரியனின் கிடைமட்ட நகர்வுகளை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டில் இருந்து ஆய்வுச் செய்வது இன்றியமையாததாகும். அதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா? கிழக்கு, மேற்காக 'அ', 'ஆ',  'இ' என மூன்று குத்துக் கோடுகள் போடப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். நாம் கிழக்கு நோக்கி நிற்பதாகக் கொள்வோம். சரியான கிழக்கு நோக்கி இருக்கும்போது இடப்புறம் உள்ள 'அ'  கோடு வடக்கேயும் வலப்புறம் உள்ள 'இ' கோடு தெற்கேயும் இருக்கும் அல்லவா? இப்போது ஒருவர் கோடு 'அ' விலிருந்து கோடு 'இ' யிற்கு கிடைமட்டத் திசையில் நகர்ந்துப் போவதாகக் கொள்வோம். கோடு 'அ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து தெற்கே "போனது" போலவும், கோடு 'இ' யிலிருந்து பார்க்கும்போது வடக்கில் இருந்து தெற்கே "வந்தது" போலவும் தெரியும். அதுவே கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து "வந்து" பின்னர் தெற்கு நோக்கி "போனது" போலத் தெரியும். நகர்பவரைச் சூரியனாகக் கருதினால் நடுவில் உள்ள கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும் ஒருவருக்குச் சூரியன் வடக்கேயும், தெற்கேயும் பயணிப்பது தெரியும். பூமியில் கடகரேகைக்கும், மகரரேகைக்கும் இடையே நிலநடுக்கோடு உள்ளது. சூரியனின் நகர்வை நுட்பமாகக் கணிக்க நிலநடுக்கோட்டின் மீது இருப்பது இன்றியமையாதது. எனவேதான் நாட்காட்டியையும், நெடுவரைகளையும் உருவாக்கிய பண்டைய தமிழர்கள் சூரியனின் நகர்வை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இன்றைய தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் நிலநடுக்கோட்டு நிலப்பகுதி 'நிரட்சலங்கையே' எனவே தங்களின் சூரிய ஆய்விற்கும், நெடுவரைக்கும் நிரட்சலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

                                                                                                                       - பாலா பாரதி 


 


3 comments:

  1. Congratulations on your research sir.
    I have a few comments.
    This arbitrary line doesn't appeared to be used for standardised time throughout tamilnadu/India from your text.
    No evidence from your text that people used standardised time ignoring the local noon based times.

    Nothing special about Ujjain other than it is near the northern solstice which is true any place along that latitude
    Lot of logical jumps and guesswork without providing evidence in your research

    ReplyDelete
    Replies
    1. Few questions.
      Why stop at equator ?
      Why not going further south to tropic of Capricorn?

      Delete
  2. This arbitrary line mostly passing through the seas- which makes one wonder how and why observe sun position in sea instead of in the land mass if they had started in any of the other place in the tropic of cancer east of Ujjain.

    ReplyDelete