Sunday, 31 December 2023

முதல் மாதம் தையா...? சித்திரையா...?

தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர்.

     தை மாதம்தான் ஆண்டின் முதல்மாதம் என்பதற்கு அதைச் சார்ந்தவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்கள்:தமிழர்கள் சூரியன் தனது வடசெலவைத் துவங்கும் நாளையே முதல் நாளாகக் கொண்டிருந்தனர். விவசாய அறுவடை திருநாளில் சூரியனையும் மாடுகளையும் வணங்கி அந்நாளைக் கொண்டாடினர். பஞ்சாங்கத்தில் தை மாதத்தை அடிப்படையாகக் கொண்ட மகர சங்கராந்தி ஆண்டுபலன் என்னும் பெயரில் ஆண்டு பலன்கள் கணித்து வெளியிடுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க முடியும்.

 'தை பிறந்தால் வழி பிறக்கும்'

எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியையும் சான்றாகக் கொள்ளலாம். ஒரு ஆண்டு இளவேனில் (சித்திரை-வைகாசி), முதுவேனில் (ஆனி-ஆடி), கார் (ஆவணி-புரட்டாசி), கூதிர் (ஐப்பசி-கார்த்திகை), முன்பனி (மார்கழி-தை), பின்பனி (மாசி-பங்குனி) என ஆறு பருவங்களாகக் பிரிக்கப்பட்டு, இளவேனிற்காலம் முதன்மையாகக் கொள்ளப்பட்டது. தைமாதத்தை இலக்கியங்களும் பெருமை பேசுகின்றன.

 “தைஇத் திங்கள் தண்கயம் போல்" எனப் புறநானூறும்

"தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ" எனக் கலித்தொகையும்

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" எனக் குறுந்தொகையும்

தையை சிறப்பித்துக் கூறுகின்றன. முதற்காலத்தில் ஆண்டுப்பிறப்பு சித்திரை முதல்நாளாக இருந்ததில்லை என டாக்டர் மு.வ. கூறுகிறார். இராமநாதபுரம் கீழக்கரையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் தை மாதம் முதல் மாதமாக இருந்தது தெரிகிறது. சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட அறுபதாண்டு சுழற்சிமுறை தமிழர்களுக்கானதல்ல வடமொழியினரின் புகுத்தல், அறுபது ஆண்டுகளின் பெயர் அனைத்தும் வடமொழிப் பெயர்கள். வடநாட்டினர் தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்தவே சித்திரையை முதன்மையாகக் கொண்ட ஆண்டுமுறையைத் தமிழர்களின் மீது திணிக்கின்றனர்.

 "நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டமும், கற்பித்ததே

அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட, தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

என்று பாவேந்தர் பாரதிதாசன் சாடுவதாகக் கூறுவர். தமிழர் வாழ்வில் உழவுக்கே முதலிடம். அதனால்தான் வள்ளுவர் 'ஏர்ப்பின்னது உலகம்' என்றார். தை பிறந்தால் வழிபிறக்கும் எனக் காத்திருக்கும் உழவர்களுக்கு தை மாதம் தானே முதல் மாதமாக இருக்க முடியும். அருட்பிரகாச வள்ளலாரும் தமிழர்க்கு ஏற்றமாதம் தை என்பதோடு, தவ ஆற்றலுக்கு ஏற்றது என்பதால், தை மாதத்தில் தைப்பூசத்தில் அருட்சோதி காண்பித்தார். தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் என திருஞான சம்பந்தரும் தை மாதத்தின் சிறப்பைக் கூறுகிறார்.

     பூமி சூரியனை (நீள்)வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஒருமுறை சுற்ற ஆகும் காலம் ஓர் ஆண்டு. பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதைப்போல் தெரிகிறது. அவ்வாறே எடுத்துக்கொள்வோம். சூரியனின் வட்டப்பாதை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது எனக்கூற முடியாது. ஏனெனில் ஒரு வட்டத்திற்கு ஆரம்பமும் இறுதியும் இல்லை. இவ்வட்டத்தில் நாமாக ஒரு புள்ளியைக் குறித்து இது முதற்புள்ளியாகக் கணக்கிட முடியுமல்லவா? தமிழர்கள் அவ்வாறே செய்தனர். சூரியப்பாதையும் வான் நடுவரையும் வெட்டிக்கொள்ளும் இருபுள்ளிகளில் ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டனர். அந்தப் புள்ளியில் சூரியன் இருக்கும்போது பகலும் இரவும் சமமாக இருக்கும். அதாவது அப்புள்ளி சமநோக்குப்புள்ளி (Vernal Equinox) எனப்படுகிறது.

     அடுத்து பன்னிரண்டு இராசிகளில் மேழத்தை முதல் இராசியாகக் கொண்டனர். மேழ இராசி தொடங்கும் முதற்புள்ளி (First Point of Aries) யில் சமநோக்குபுள்ளி சந்திக்கும் நாள் அவ்வாண்டின் முதல் நாள். அதாவது மேழ இராசியில் சூரியன் நுழையும் முதல் நாள் அவ்வாண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்படுகிறது. இக்கணக்கீட்டின்படி பார்த்தால் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக அமைகிறது. ஒர் ஆண்டில் சூரியனின் இயக்கத்தை வேறொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் திசையை ஆண்டு முழுவதும் நோக்கினால் இப்புள்ளிகள் இட வலமாக நகர்வதைப் பார்க்கலாம். சூரியன் வலக் கோடியிலிருந்து இடக் கோடியை நோக்கிப் பயணிப்பதுபோல தோன்றும். இது வடசெலவு (உத்திராயணம்) எனப்படுகிறது. நமக்கு வலக் கோடியிலிருந்து இடக் கோடிக்குப் பயணம் தை முதல் நாளன்று தொடங்குகிறது. சூரியனின் ஓர் ஆண்டின் இயக்கத்தை இடது வலதாகப் பார்த்தால் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் எனவருகிறது. தை மாதம் தான் ஆண்டின் முதல் மாதம் என்பதற்கும் பல தரவுகள் கொடுக்கப்படுகின்றன.

 சித்திரையே முதல் மாதம் என வாதிடுபவர்கள் பின்வரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்:

"திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து 

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடுநிலை இய 

உரோகிணி நினைவனள் நோக்கி" (நெடுநல் வாடை 160-163)

என்று நக்கீரனார் பாடியிருக்கிறார். சூரியன் வட்டப்பாதையில் சுற்றுகிறது. அதில் ஆரம்பப்புள்ளி, இறுதிப்புள்ளி என்று ஏதுமில்லை. இருந்தும் இது ஆகாய நடுவரையை வெட்டும் புள்ளியைக் கொண்டு இப்புள்ளி மேழ உடுக்கணத்தில் நுழையும் நாளே ஆண்டின் முதல் நாள், அந்த மாதம் சித்திரையாகும். பாடலில் நக்கீரனார் ஆடுதலை எனக் குறிப்பிடுவது மேழ உடுக்கணத்தைத்தான். பழமையான கோயில்களில் இருபத்து ஏழு விண்மீன்கள் சிற்ப வடிவில் காட்டப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஆவுடையார் கோயில் சிற்பத்தில் இந்த இருபத்து ஏழு விண்மீன்களைப் பார்க்கலாம். இதில் முதலாவதாக அசுவதி விண்மீன் உள்ளது. இந்த அசுவதிக்குச் சூரியன் வரும் நாளே சித்திரை முதல் நாள். அசுவதி விண்மீன் மேழத்தில் இயங்குவது. எனவே சித்திரைத்தான் ஆண்டின் முதல் மாதம். பிங்கல நிகண்டு இராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.

     கோடைக் காலமே முதலாவது பருவம். 'தலைவந் திசைவேனில்' (சீவக-648)  எனச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது. கோடைகாலத்தின் தொடக்கம் சித்திரையாகும். வீரமாமுனிவரும் தமிழர்கள் ஏப்ரல் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் ஆண்டின் முதல் நாளைக் கொண்டுள்ளனர் என்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912 ஆம் ஆண்டு, பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியில் 'சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' எனக் கூறப்பட்டுள்ளது.

          தமிழர் ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாக வருவது தையா? சித்திரையா? என்பதில் நீண்டகாலமாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும், சித்திரையே முதல் மாதம் என்பதற்கு அதன் சார்பானவர்கள் பல தரவுகளையும் கொடுத்து வருகின்றனர். உண்மையில் எது என்பதைப் பார்க்கும் முன்னர் சில அடிப்படைச் செய்திகளைப் பார்ப்போம்.

 நிலவு நாட்காட்டி (Lunar Calendar)

நிலவின் வளர்பிறை, தேய்பிறைகளை அடிப்படையாகக் கொண்டுக் கணக்கிடப்படுவது நிலவு நாட்காட்டி ஆகும். உலகின் மிகப்பழமையான நாள் கணக்கிடும் முறை இதுவாகும். பிரான்ஸ் நாட்டின் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட பாறைஓவியங்களில் இதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் உசிலம்பட்டிக்கு அருகில் புலிப்புடவு எனும் குகையில் நிலவு நாட்காட்டி பாறைஓவியமாக வரையப்பட்டுள்ளது. ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமிவரை உள்ளது ஒரு மாதம். இது 29.5 நாள்களைக் கொண்டது. ஓர் ஆண்டின் 12 மாதங்களில் ஒருமாதம் 29 நாள்களாகவும், அடுத்த மாதம் 30 நாள்களாகவும் எடுத்துக் கொள்ளப்படும். மொத்தம் 29.5 x 12 = 354 நாள்களைக்கொண்டது ஒரு நிலவு ஆண்டு (Lunar Year). மாதம் என்ற பெயர் நிலவின் மற்றொரு பெயரான 'மதி'யிலிருந்து வந்தது. 


சூரிய நாட்காட்டி (Solar Calendar)

சூரிய நகர்வை அடிப்படையாகக் கொண்டது சூரிய நாட்காட்டி (உண்மையில் சூரியன் நகரவில்லை பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் நகர்வதைப்போல தோன்றுகிறது). இதில் இரண்டுவகையான இயக்கங்கள் உண்டு. ஒன்று கிழக்கு, மேற்காக இயங்கும் இயக்கம். இரண்டாவது தெற்கு, வடக்காக நகர்வது. மறுபடியும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சூரியன் அவ்வாறு நகரவில்லை பூமி சூரியனை 23.5 பாகை சாய்ந்தவாறு சுற்றுவதால் அவ்வாறு தோன்றுகிறது. கிழக்கு, மேற்காக இயங்கும் இயக்கத்தில் சூரியனின் பாதை வட்டமாக இருக்குமல்லவா? ஒரு வட்டத்திற்கு 360 பாகை, இதைச் சுற்றி முடிக்க ஆகும் காலம் ஒரு நாள் இல்லையா? காலை சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் ஒருநாள்.

சூரியன் விண்மீன்களின் நிலைத்த பின்னணியில் நகர்ந்து வருகிறது. ஒரு விண்மீன் அருகிலிருந்து நகர ஆரம்பித்த சூரியன் மீண்டும் அதே விண்மீன் அருகே வர ஆகும் காலம் ஓர் ஆண்டாகும். இதை உடு ஆண்டு (Sidereal Year) என்போம். இது 365.2563 நாள்களாகும். ஒரு வட்டத்திற்கு ஆரம்பப் புள்ளி இல்லை எனவே சூரியப் பாதையான வட்டத்தில் நாம் ஒரு புள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகாய நடுக்கோடும் (Celestial Equator), சூரியப்பாதையும் (Zodiac) வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து கணக்கிடுகிறோம். இப்புள்ளி மேழ உடுக்கணத்தின் (Aries Constellation)  மீது விழுகிறது. இப்புள்ளி வசந்தகால சமபகலிரவு நாள் (Vernal Equinox) ஆகும். சூரியன் மேழ இராசியில் இயங்கும் மாதம் 'சித்திரை'. (தற்போது மேழ விழு நகர்ந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட/ஏற்படும் விளைவுகளைத் தனியாகக் காண்போம்). எனவே ஆண்டின் முதல் மாதம் சித்திரையே. 

நிற்க...

சூரியனின் மற்றொரு நகர்வான கிடைமட்ட நகர்வை (Horizontal movement) கணிக்க ஆண்டு முழுவதும் சூரியன் உதிக்கும் புள்ளியைப் பார்க்க வேண்டும். சூரியன் உதிக்கும் புள்ளி ஒவ்வொரு நாளும் கிடைமட்டமாக நகர்ந்துக் கொண்டே வரும். அது தெற்கிலிருந்து வடக்கே நகர்வது வடசெலவு (உத்திராயணம்) என்றும், வடக்கிலிருந்து தெற்கே நகர்வது தென்செலவு (தட்சினாயணம்) எனவும் அழைக்கப்படுகிறது. வட செலவுக்கு ஆறு மாதங்கள், தென் செலவுக்கு ஆறு மாதங்கள் என்பது ஒர் ஆண்டின் கணக்காகும். பருவ காலங்கள் இதனடிப்படையில் அமைவதால் பருவ ஆண்டு (Tropical Year) எனவும் அழைக்கப்படுகிறது. இது 365.2422 நாள்களைக் கொண்டது. இவ்வாண்டுமுறை வடசெலவு (உத்திராயண) நாளிலிருந்து எண்ணப்படுகிறது. உத்திராயணம் ஆரம்பிப்பது தை மாதத்தில். எனவே ஆண்டின் முதல் மாதம் 'தை' யே. (வானியல்படி இதில் வேறுபாடு உண்டு அதைத் தனியே காண்போம்).

 

நிற்க...

உடு ஆண்டின் (Sidereal Year) முதல் மாதம் "சித்திரை", பருவ ஆண்டின் (Tropical Year) முதல் மாதம் "தை". இப்போது நமது கேள்விக்கு வருவோம்

 'தமிழர்கள் சித்திரையை முதல் மாதமாகக் கொண்டனரா?, தையை முதல் மாதமாகக் கொண்டனரா?'

தற்போது கிரிகோரியன் நாட்காட்டியை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஜனவரி முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகக் கடைபிடிக்கிறோம். இவ்வாண்டு அனைவரும் கடைபிடிக்கும் 'பொது ஆண்டு'. வங்கிகளும், பணம் வரவு, செலவு செய்கிறவர்களும் ஏப்ரல் முதல் தேதியை ஆண்டின் முதல் நாளாகவும், அவ்வாண்டை 'நிதி ஆண்டு' (Financial Year) என்றும் அழைக்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் ஜுன் மாதத்தை முதல் மாதமாக் கொண்ட 'கல்வி ஆண்டு' (Academic Year) கடைபிடிக்கிறார்கள். எனவே பொது ஆண்டு அனைவருக்குமானது, செய்யும் தொழிலைப் பொறுத்து மற்றொரு ஆண்டு முறையையும் நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? அதுபோல மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு சித்திரையை முதலாவதாகக் கொண்டும், விவசாயப் பணிகளுக்காக தையை முதலாவதாகவும் கொண்டனர்.

பயிர்த்தொழில் புரியும் விவசாயிகள் பொது ஆண்டுடன் விவசாயத்திற்கு அடிப்படையான பருவ ஆண்டைப் பயன்படுத்துவது இயல்புதானே! அதனால்தான் இரண்டு கருத்துக்களுக்கும் தரவுகள் கிடைக்கின்றன. 

சித்திரை முதல் மாதம் என்பது வடமொழியினர் தமது மீது திணித்ததாகத் தையைக் கடைபிடிப்பவர்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல, சித்திரை மாதமும் தமிழர்களுக்கு உரியதுதான். சூரிய நாட்காட்டியில் மேழம் என்று பெயர் பெற்றிருந்த மாதம் சூரிய - சந்திர நாட்காட்டியில் சித்திரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது, அவ்வளவே.

ஆக, சித்திரை முதல் நாள் பொது ஆண்டின் தொடக்கம். தை முதல் நாள் விவசாய ஆண்டின் தொடக்கம். இரண்டும் தமிழர்களுக்கு உரியதே 

                                                                                                                         - பாலா பாரதி 


 

பாறை ஓவியங்களில் வானியல் பதிவுகள்

பழங்காலத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த குகைகளில் வரைந்து வைத்துள்ள ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் அல்லது குகை ஓவியங்கள் என்கிறோம். வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய இப்பதிவுகள் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்ள உதவுவனவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் பாறை ஓவியங்கள் பற்றி உலகிற்குத் தெரியவந்தது. உலகின் பலபகுதிகளில் கிடைக்கும் இவ்வோவியங்களில் பிரான்ஸ் நாட்டில் லாஸ்காஸ், சாவெட் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் புகழ்பெற்றவை. அதுபோல இந்தோனேஷியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட கை ஓவியங்கள் மிகவும் பழமையானவைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலுள்ள பிம்பெட்காவில் புகழ்பெற்ற பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய ஓவியங்கள் கிடைப்பது சிறப்பானதாகும். தமிழ்நாட்டில் கிடைக்கும் ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு, வெள்ளை நிற ஓவியங்களாக உள்ளன. இவ்வோவியங்களில் மனித, விலங்கின உருவங்கள், வேட்டைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், அன்றாடச் செயல்பாடுகள் போன்ற காட்சிகளுடன் வானியல் குறியீடுகளும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

     பிரான்ஸ் நாட்டின் லாஸ்காஸ் குகைகளில் ஓரையான் உடுக்கணம், காளை உடுக்கணத்துடன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் வரையப்பட்டுள்ளன. இது வரையப்பட்ட காலம் 15,000 ஆண்டுகள் என்கிறார்கள். அதாவது 15,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வானில் உள்ள விண்மீன்களைக் கண்டு அவற்றைத் தொகுதிகளாகப் பிரித்துப் பதிவுச் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இதுபோல ஓரையான் உட்பட பல உடுக்கணங்களைத் தமிழ்நாட்டிலும் தொல்பழங்கால மக்கள் குகைகளில் வரைந்து வைத்துள்ளனர். பாறை ஓவியங்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று வண்ணக் கலவைக் கொண்டு பாறைகளில் வரைவது (Pictographs) மற்றொன்றுப் பாறைகளைக் கீறி உருவங்களை உண்டாக்கும் பாறைக்கீறல் ஓவியங்கள் (Petroglyphs).

     நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ‘ஏர்பெட்' என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் பாறைக்கீறல்களாக வானியல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் மனிதன், தேள், பாம்பு ஆகிய உருவங்கள் முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் மனித உருவம் ஓரையான் உடுக்கணத்தையும், தேள் உருவம் விருச்சிக உடுக்கணத்தையும், பாம்பு உருவம் நமது பால்வெளி மண்டலத்தையும் குறிப்பதாக இருக்கலாம். மேலும், இங்குச் சூரியன், நிலவு போன்ற உருவங்களும் காணப்படுகின்றன. இதுபோலப் பல இடங்களில் வானியல் தொடர்பான ஓவியங்கள் கிடைத்தாலும், அவற்றுள் 'புலிக்கரடு' ஓவியங்கள் தனித்துவமானவைகளாகத் திகழ்கின்றன.




        மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள புலிக்கரடு என்ற குகையில் வெள்ளை நிறத்தில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் பாறை ஓவியங்கள் ஆய்வாளரான திரு. க.த.காந்திராஜன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குகையின் தலைக்குமேலே உள்ள பாறையில் சூரியன், நிலவு உருவங்கள் ஒளிரேகைகளுடன் வரையப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் வளைகோடொன்று போடப்பட்டு அதில் குறுக்காகச் சிறு கோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த சிறு குத்துக் கோடுகள் எண்ணிக்கைக்காகப் போடப்பட்டுள்ளன. மேலும், இதில் பதினைந்து கோடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை நிலவின் இரு நிலைகளான அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கையாகும். இரண்டு ஒளிரேகைகளுடன் கூடிய வட்டங்களில் ஒன்று சூரியன் மற்றது நிலவு. எது சூரியன்? எது நிலவு? என்ற கேள்விக்கு சாதக நூலொன்றில் உள்ள பாடலிலிருந்து விடை கிடைக்கிறது.

 

"ஐந்திருபத் தொன்றேழ் அதன்பின்னோற்

       கொன்பது பத்(து)

உந்திய லீரெட்டு நான் கொரு நான்

       (கு)-உந்தும் 

கதிராதி பாம்பீறாய்க் கட்டுரைத்த கோள்கட்(கு) 

எதிரா வருங்கதிராம் என்."

 (பக்கம் 4, காலச்சக்கரம், தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீட்டு எண்:125, தில்லைநாயகப் புலவர் இயற்றியது, பதிப்பாசிரியர் வித்துவான் திரு.அடிகளாசிரியர், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர்).

 பொருள்: சூரியனுக்கு ஐந்து, சந்திரனுக்கு இருபத்தொன்று, செவ்வாய்க்கு ஏழு, புதனுக்கு ஒன்பது, வியாழனுக்குப்பத்து, வெள்ளிக்கு பதினாறு, சனிக்கு நான்கு, இராகுவிற்கு நான்கு கதிராகும். 

        ஓவியத்தின் வலப்புறத்திலுள்ள வட்டத்தில் ஐந்து ரேகைகளும், இடப்புறத்திலுள்ள வட்டத்தில் இருபத்தொன்று ரேகைகளும் காட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட பாடலின் பொருள்படி வலப்புறத்திலுள்ளது சூரியன், இடப்புறத்திலுள்ளது நிலவும் ஆகும். நிலவு தேய்ந்து வளர்வது சூரியனின் ஒளியினால், மேலும் அது தேய்ந்து மறையும் காலம் பதினைந்து என்பது இவ்வோவியத்தின் பொருளாகும். இவை வரையப்பட்ட காலம் என்னவாக இருக்கும்? லாஸ்காஸ் ஓவியங்களில் காணப்படும் வானியல் குறியீடுகள் 15,000 ஆண்டுகள் பழமையானவையாதலால் அதுபோல வரையப்பட்ட இந்த ஓவியமும் மிகப் பழமையானதாகத்தான் இருக்கும். குறைந்தது 5000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கும் என்பது நமது மதிப்பீடு. அறிவியல் ஆய்வின் மூலம் காலத்தைக் கணிக்கும்போது அதன் பழமை நமக்குத் தெரியவரும். மேற்கூறிய பாடல் சினேந்திரமாலை என்னும் நூலில் உள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இப்பாடல் வடமொழியிலிருந்து வந்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், வடமொழிக்கு தமிழிலிருந்து போயுள்ளது என்பதை இந்த ஓவியம் மூலம் உறுதியாகக் கூறலாம். இக்குகையில் வாழ்ந்த கணியர்கள் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் இவை. இவ்வோவியங்களின் எழுத்து வடிவங்களான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகளை இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்குமேல் பாதுகாக்க முடியாது. மூல ஓலைச்சுவடிகள் அழிந்து விட்டாலும் அவற்றின் ஓவிய வடிவம் குகையொன்றில் கிடைப்பது சிறப்பானதாகும்.

                                                                                                                     - பாலா பாரதி 

 

மேகலா நகரங்கள்

உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு நடுவரையை முதன்முதலில் அமைத்த தமிழர்கள் இதற்கென நான்கு நகரங்களை நிலநடுக்கோட்டின் மீது அமைத்தனர். அந்நகரங்களே மேகலா நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் ஆகிய நான்குமாகும். மேகலா நகரங்கள் குறித்து திரு. வெள்உவன் அவர்கள் தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் என்னும் நூலில் விரிவாகப் பேசுகிறார்.

     லங்காபுரி (நிரட்சலங்கை), ரோமகபுரி, சித்தபுரி,  பத்திராசுவம் ஒன்றுக்கொன்று 90° பாகையில் மேகலா ரேகையில் (நிலநடுக்கோட்டில்) அமைந்த இடங்களாகும். மயனுடைய சூரிய சித்தாந்தம் என்ற நூலில் இந்நான்கு நகரங்களைப் பற்றிய மிக விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன என டாக்டர்.ஆர்.ஆர். கார்னிக் தன்னுடைய "Mayan and Surya Siddhandha, Mayans on the high seas" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

     "புவிக்கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே விதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் காலவேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90° பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கிழக்கிலிருந்து தொடங்கி பத்திராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால் கண்டத்தில் ரோமகபுரி, குருகண்டத்தில் சித்தபுரி என நான்காகும்".

     (To demonstrate further the sun does not shine on all the earth at the same time and that there is a delay in the local time all the world. Mayasura selects four places are separated by 90 degrees. It is to be noted that all these four places are seaports. The places starting from the east the Yamakodi in land called Bhadrasva, then Lanka land called Bharata then Romaka in land called ketumala, and then Siddhapuri in land called Kuru) (சூரிய சித்தாந்தம் xxii-38-39-40)

     'பத்ராசுவக் கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரத கண்டத்தில் எழுகிறது. கேதுமாலக் கண்டத்தில் நள்ளிரவும் குருகண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு, கதிரவன் மறைவு என்ற இந்தச் சுழற்சி பரதகண்டத்தை நடுவாகக் கொண்டு உலகம் முழுவதும் கணக்கிடப்படுகிறது என்று சூரியசித்தாந்தம் விளக்குகிறது’.

     (inxxiiiin xxii-70-71 it states when sun is over head in Bhadrasva, it is just rising in Bharata, it is midnight in Ketumala and set in kuru. The cycle of Miday, sun rise, mid night, and sun set rotates from Bharata and rotates (round the world)

     புரி என்ற சொல் பட்டினம் (கடற்கரை நகரம்) என்று பொருள் கொள்ளும். மேகலா நகரங்கள் எனக் குறிப்பிட்டப்படுகின்ற நான்கு நகரங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பதைச் சூரிய சித்தாந்தக் குறிப்புகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைய கிரீன்விச் மைவரைக் கணக்குப்படி கிழக்கு 75-76 பாகைகளுக்கு இடையில் இந்து மாக்கடலில் இலங்காபுரியும், மேற்கு 14-15 பாகைக்கு இடையில் தென் அட்லாண்டிக் கடலில் உரோமகப்புரியும் மேற்கு 104-105 பாகைக்கு இடையில் தென்பசிபிக் கடலில் சித்தபுரியும், கிழக்கு 165-166 பாகைக்கு இடையில் கிரிபதி தீவுக் கூட்டங்களுக்கு அருகில் பத்திராசுவமும் இருந்திருக்க வேண்டும் என்பதைச் ‘சூரிய சித்தாந்தம்’ உணர்த்துகிறது. இந்நான்கு மேகலா நகரங்களும் கடலுள் மூழ்கி விட்டன.

     லங்கோச்சயினி மத்திய ரேகை என்று சொல்லிலிருக்கிற உச்சயினி நகரம் கடகத் திருப்பத்தில் இருக்கிறது. மேலும் இந்த உச்சயினி நகரம் இந்திய வான இயலில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது தெரிந்தது. அந்தச் சொல்லில் வரும் இன்னொரு நகரமான இலங்கா மகரத் திருப்பத்தில் இருந்திருக்கிறது என்பதை அந்தச் சொல்லமைப்பின் அடிப்படையிலேயே நாம் உய்த்துணர முடியும். மகரத்திருப்பத்தின் இலங்கையையும் கடகத்திருப்பத்தின் உச்சயினியையும் இணக்கிற மைவரையையே ‘லங்கோச்சயினி மத்திய ரேகை' என்று குமரிக்கண்டத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'ஞாலத்தின் நடுவரையுடன் ஒரு குறிப்பிட்ட மைவரை சேர்கின்ற இடத்தை வைத்தே ஞாயிறு எழும் வேளையைத் தமிழர்கள் கணக்கிட்டு வந்தனர்' என்று "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு" என்ற தன் நூலில் கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. லங்கோச்சயினி மைவரை நிலநடுக்கோட்டை வெட்டுமிடத்தில் அமைந்திருந்த நகரமே ஐந்திரக் குறிப்புகளில் 'நிரட்சலங்கை' என்று குறிப்பிடப்படுவதும் மேகலா நகரங்களில் ஒன்றுமாகிய இலங்காபுரியே.


                உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு மைவரையை முதன்முதலில் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்களே. அவர்கள் அமைத்த அந்த மைவரையின் அடிப்படையில் தான் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகர் இலண்டன் அருகில் உள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் நிரைவரையை, மைவரையாக்கி அதனடிப்படையில் உலகநாடுகளின் நேரங்களை வரையறுத்துள்ளனர். உலகத்திணைப் படத்தில் குமரிமுனைக்குத் தெற்கே 75டிகிரி கிரீன்விச் கிழக்கு நிரைவரையை ஒட்டித் தென்முனை வரை நீண்டு பரந்த கடல் பகுதியின் ஆழம் 600 அடிக்குட்பட்டதாகவே குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பகுதிகள் குமரிக்கண்டம் சிறுகச் சிறுகக் கடலில் மூழ்கியபோது இறுதியில் மூழ்கியவை என்பது புலனாகிறது.

     மகரத்திருப்ப இலங்காவையும் அதைச் சார்ந்த பெரும் நிலப்பரப்பையும் தான் உரோம, கிரேக்கர்கள் பழங்குறிப்புகளில் தாமிரபரணி என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதைத்தான் தமிழிலக்கியங்களும் தென்னிலங்கை எனச் சொல்லிச் சிறப்பிக்கின்றன. எனவே இந்தப் பகுதியே இராவணன் ஆண்ட ‘தென்னிலங்கை'யாக இருந்தல் வேண்டும் என்பது தெளிவு. தமிழ் மொழி அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையைத் தென்னிலங்கையாகவும் இலங்காபுரியை நிரட்சலங்கையுமாகவும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

     தென்னிலங்கை பற்றிய தேடலுக்கு அடிப்படையாய் அமைந்தவை ஐந்திரத்தில் வரும் ‘லங்கோச்சயினி' மற்றும் 'நிரட்சலங்கை' என்கிற சொற்கள் தாம். இவை குமரிக்கண்டத் தமிழர்களின் வான இயல் குறித்த மிகச்சிறப்பான பதிவுகள் என்பதில் ஐயமில்லை. இவை மட்டுமல்ல ஐந்திரங்களின் முதன்மைப் பகுதியில் இருப்பவை முற்றிலும் வான இயல் செய்திகளே. அச்செய்திகளுக்கும் கணியத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்டைத்தமிழர்களின் வான இயல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்திரங்களிருந்து வான இயலுக்குப் பொருந்தாத குப்பைக் கூளங்களை அகற்றிவிட்டு அவற்றை ஆய்வு செய்தல் இன்றியமையாதது. தமிழர் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளில் நாட்டமுள்ளோர் இதில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.

 (தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் - வெள் உவன்)

                                                                                                                                         - பாலா பாரதி 


தமிழரின் நடுவரை கணக்கீடு

நேரம் உலகம் முழுவதும்  ஒரே அளவாக இருப்பதில்லை, நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தற்போது 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Meridian) யைக் கொண்டு பூமியில் உள்ள நாடுகளின் நேரங்கள் அளக்கப்படுகின்றன. கோளவடிவில் உள்ள பூமியின் மேலுள்ள நாடுகள் ஒரு செவ்வகத்தில் பொருத்தப்படுகின்றன. இதில் செவ்வகத்தின் நீளம் அகலத்தை போல் இருமடங்காக இருக்கும். இச்செவ்வகத்தின் நடுவில் கிடைமட்டமாக போடப்படும் கோடு நிலநடுக்கோடாகும். இக்கோடு இரு சம பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் பூஜ்ஜியத்தில் இருந்து பதினொன்று வரை பன்னிரண்டு புள்ளிகள் குறிக்கப்படுகின்றன. வலப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து +11 வரையிலும், இடப்புறத்தில் பூஜ்ஜியத்திலிருந்து -11 வரையும் எண்ணிடப்படுகின்றன. இப்பள்ளிகளின் வழியே செல்லும் குத்துக்கோடுகள் (உண்மையில் வளை கோடுகள்) நெடுவரைகள் (Meridians) ஆகும். நடுவில் உள்ள பூஜ்ஜியத்தின் வழியே செல்லும் நெடுவரை முதன்மை நெடுவரை (Prime Meridian) அல்லது நடுவரை என அழைக்கப்படுகிறது. இக்கோடு இங்கிலாந்தின் கிரீன்விச் வழியே செல்வதால் இதை 'கிரீன்விச் நடுவரை' (Greenwich Prime Meridian) என அழைக்கப்படுகிறது.

 இந்த நடுவரையிலிருந்து உலகின் அனைத்து பகுதிகளுக்குமான நேரங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த நடுவரை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், மேற்கு ஆப்பிரிக்கா வழியே செல்கிறது. தற்போது அணுக்கடிகாரம்  கொண்டு நுட்பமாகக் காலத்தைக் கூறும் முறையான UTC- Universal Time Coordinate முறையைப் பயன்படுத்துகிறோம். முதன்மை நடுவரையின் வலப்புறத்தில் இருக்கும் நெடுவரையில் நேரங்கள் கூடிக்கொண்டேவரும். முதன்மை நடுவரையில் மணி நடுஇரவு 12 ஆக இருக்கும்போது வலப்புறம் முதல் நெடுவரையில் காலை ஒரு மணியாகவும், இரண்டாம் நடுவரையில் காலை இரண்டு மணியாகவும் இருக்கும். இது தொடர்ந்து அதிகரித்து பதினொன்று  மணியில் முடியும். இடப்புறம் உள்ள நெடுவரைகளில் முதல் நெடுவரையில் இரவு 11 மணியாகவும், இரண்டாவது நெடுவரையில் இரவு10 மணியாகவும் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். ஒரு நாடு எந்த நெடுவரையில் அமைகிறதோ அதைப் பொறுத்து அந்நாட்டின் நேரம் கூறப்படும். எடுத்துக்காட்டாக, இந்தியா ஐந்தாவது, ஆறாவது நெடுவரைகளில் அமைந்துள்ளது. இது ஐந்தரையாக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தியாவின் நேரம் UTC+5:30 எனக் கணக்கிடப்படுகிறது. இதையே இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் (IST) என்கிறோம். அதாவது கிரீன்விச்சில் நடுஇரவு 12 மணியளவில் இந்தியாவில் காலை ஐந்து முப்பது மணி. இதுபோல முதன்மை நடுவரைக்கு இடப்புறம் உள்ள நாடுகளில் நேரம் குறைத்துக் கணக்கிடப்படுகிறது. இம்முறை எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது?  உலகம் முழுக்க ஒரே முறையைக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவில் வாசிங்டன் நகரில் 1884 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைவரும் பொதுவான நடுவரையைப் பயன்படுத்துவது என்றும் அது இங்கிலாந்தின் 'இராயல் அப்சர்வேட்டரி' வழியே செல்லும் கோடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருபத்து ஐந்து நாடுகள் கலந்து கொண்டதில் இருபத்து இரண்டு நாடுகள் ஒப்புதல் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் நாடு ஏற்றுக்கொள்ளாமல் தனது நடுவரையையே தொடர்ந்து பயன்படுத்திது. பின்னர் 1911 ஆம் ஆண்டிலிருந்து அந்நாடும் பொதுவான நடுவரையை ஏற்றுக்கொண்டது. 

     பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இவ்வாறு நெடுவரைகளைக் கொண்டு காலம் கணிக்கும் முறையை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெடுவரைகளைக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளின் நேரங்களையும் அளக்கும் முறையை தமிழர்கள் வகுத்திருந்தனர். மிகப்பரந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு இடத்தின் நேரங்களை ஏன் கணக்கிட்டனர்? உலகின் மற்ற பகுதிகளுக்கு கடலோடிகளாகத் தமிழ் வணிகர்கள் கப்பலில் சென்று வணிகம் செய்து வந்தனர். எனவே அவர்களுக்கு மற்ற நாடுகளுக்கான நேரம் கணிக்கும் முறைத் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் நெடுவரைக் கணக்கீட்டு முறையை தங்களுக்கென உருவாக்கிக் கொண்டனர். இம்முறையை எப்படி உருவாக்கினர் என்பதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

     இதற்கானச் சான்றுகள் தமிழ் ஐந்திரங்களில் (பஞ்சாங்கங்களில்) உள்ளன. பஞ்சாங்கம் என்றாலே மூட நம்பிக்கைகள் அடங்கிய புத்தம் என்று பலர் நினைப்பர். பிற்காலத்தில் நுழைந்த சடங்குகள், நோன்புகள், திருவிழாக்கள் போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் அதில் வானியல் குறிப்புகள் மிஞ்சும். அவற்றில் நாம் வரலாற்றுக் குறிப்புகளைக் கூட தேடலாம்.  அந்த வகையில் 'மநோன்மணி விலாச சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில்' ஒரு குறிப்புக் காணப்படுகிறது. இந்த பஞ்சாங்கம் மத்திய ஸ்தானத்திற்கு கணிக்கப்பட்டதாகவும், தஞ்சாவூர் பலசாயை அங்குலம் 2, வியங்குலம் 17, இதற்கு அஷஜ்யா 643 இக்கு அஷாம்சம் 10, பாகை 47 கலை. லங்கோஜ்யையினி மத்ய ரேகையிலிருந்து ரேகாந்திரம் 34 வினாடிக்கு யோஜனை 46 கிழக்கு.  (அட்சம் – அட்சரேகை - Latitude,  ரேகாந்திரம் - தீர்க்ரேகை - Longitude, பலசாயை - விஷுதின சூரியோச்ச சமயம் 12 அங்குல சங்குவின் நிழலின் அங்குலமும் சதாம்சமும்)

     அதாவது பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைகளை அக்கால அலகுகள் கொண்டு சொல்கிறார்கள். இன்று அட்சரேகை, தீர்க்க ரேகைகளை கூறும்போது பாகை (Degree) நிமிடம் (Minute) வினாடி (Second) எனக்கூறுவதைப்போல வேறு அலகுகளை பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இன்று ஒருவருடைய இருப்பிடத்தைக் குறிக்கும்போது அட்சரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு, தீர்க்க ரேகையிலிருந்து எவ்வளவு தொலைவு எனக்குறிப்பதைப் போல இங்கு குறிப்பிடுகிறார்கள். இதில் "லங்கோஜ்யையினி மத்திய ரேகைக்கு" கிழக்கே தஞ்சாவூர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் லங்கோஜ்யையினி மத்திய ரேகை என குறிக்கப்படுவது அக்காலத்தில் தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய நடுவரையாகும். இதிலிருந்து இன்றைய மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜையினியையும் இலங்கையையும் இணைக்கும் குத்துக்கோடு என புரிந்து கொள்ளலாம். ஆனால் உஜ்ஜையினியையும் இன்றைய இலங்கையையும் இணைக்கும் கோடு செங்குத்தாக இல்லை. எனவே, அங்கே குறிக்கப்படுவது இன்றைய இலங்கை அல்ல உஜ்ஜையினிக்கு நேர்கீழே இலங்கை என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஏதோ ஒரு நிலப்பரப்பாகத்தான் இருக்க முடியும்.

     உஜ்ஜையினி 23.17 பாகை வடக்கு அட்சரேகை, 75.76 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் கடகரேகையின் மேல் அமைந்துள்ள நகரமாகும். இந்த உஜ்ஜையினியையும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு நிலப்பரப்பையும் இணைக்கும் ஒரு கோடே இந்த லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை என எளிதில் புரிந்துகொள்ளலாம். உஜ்ஜையினி நகரம் கடகரேகையின் மீது அமைந்துள்ள நகரமாகும், இதன் எதிர்ப்புறம் நிலநடுக்கோட்டின் மேலே லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையை இணைக்க ஒரு  நிலப்பரப்பு உண்மையில் இருந்ததா எனில் ஆம். அது தற்போது கடலில் அமிழ்ந்துள்ளது. நெடுவரை வகுக்கப்பட்ட காலத்தில் அந்த நிலப்பகுதி தீவாக இருந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் தரவுகள் கிடைத்துள்ளன.

     நிலநடுக்கோட்டின் மேலிருந்த அப்பகுதி இன்றைய மாலத்தீவுக்கு அருகே உள்ளது. தற்போதைய மாலத்தீவு நிலநடுக்கோட்டின் மேல் இல்லை, ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட மாலத்தீவின் சில தீவுகள் நிலநடுக்கோட்டின் மீது அமைந்திருந்தன. இதை ஐரோப்பிய மாலுமிகளின் வரைபடங்கள் உறுதி செய்கின்றன. சான்றாக 1676 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய மாலுமிகள் பயன்படுத்திய வரைபடத்தைக் கூறலாம். 500 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கோட்டின் மேலே இருந்த சில தீவுகள் இன்று கடல் நீரின் அடியில் உள்ளன. இதில் ஒரு தீவைதான் லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினியுடன் இணைக்கிறது. தற்போதைய மாலத்தீவு கடல் மட்டத்திற்கு மேலே சிறிதளவே உயரமாக உள்ளது. அதாவது கடல் மட்டம் மேலும் சிறிது உயர்ந்தாலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலப்பகுதிகள் கடல் மட்டத்தின் உயர்வால் நீரில் மூழ்கிவிட்டிருக்கின்றன. லங்கோஜ்ஜையினி மத்திய ரேகையுடன் இணையும் அந்த நிலப்பரப்பே பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் 'நிரட்ச்சலங்கை'. நிராசை என்றால் ஆசையில்லாத எனப் பொருள். நிர்-பூஜ்ஜியம், நிரட்சம் என்றால் அட்ச்சம் (Latitude) பூஜ்ஜியமான என்று பொருள். அதாவது, நிரட்ச்சலங்கை என்றால் நிலநடுக்கோட்டில் பூஜ்ஜிய அட்ச்சத்தை (Latitude) உடைய இலங்கை என்று பொருள். இதுவே தென்னிலங்கை என வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கே இருந்த நிலப்பரப்பைக் குறித்துப் பல தரவுகள் கிடைக்கின்றன. மேலும் அதைக் குறிப்பிடுகிறவர்கள் அந்த நிலப்பரப்பை இலங்கை (சிலோன்) என்று புரிந்து வைத்திருந்தனர். த சில்ட்ரன் ஆப் மூ (The Children of Mu) என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் சர்ச்வேர்டு(James Churchward) அவர்கள் இந்த நிலப்பரப்பை வரைபடமாக வரைந்துள்ளார். 1929 ஆம் ஆண்டு வரையப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடம் நாம் கூறும் நிரட்சலங்கையை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தாலமியின் வரைபடத்தில் இலங்கை நிலநடுக்கோட்டில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தாலமி இலங்கையை இருபது மடங்கு பெரிதாகத் தவறாக வரைந்துவிட்டார் என்ற கூற்றையும், நிலநடுக்கோட்டின் மேல் ஒரு நிலப்பரப்பு இருந்தது என்ற கூற்றையும் இணைத்து நோக்கினால் நிலநடுக்கோட்டின் மேலே நிரட்ச்சலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இருந்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். தாலமியும் போர்ச்சுகீசியர்களும் தங்கள் வரைபடத்தில் நிலநடுக்கோட்டின் மேல் அமைந்துள்ள நிலப்பரப்பை தெளிவாகவே குறித்து வைத்துள்ளனர். அந்நிலப்பரப்பு இன்றைய இலங்கை அல்ல, ஏனெனில் அது நிலநடுக்கோட்டிற்கு மேலே தொலைவில் உள்ளது.

     இந்த நிரட்ச்சலங்கைக்குக் கீழே லங்கோஜையினி மத்திய ரேகையை தொடர்ந்து மகரத் திருப்பத்தில் ஏதேனும் நிலப்பரப்பை இணைக்கிறதா எனத் தேடினால், அவ்வாறு ஒரு நிலப்பரப்பு தற்போது இல்லை. மேலும், அங்கு கடலின் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மகரத் திருப்பத்தில் அத்தகைய நிலப்பரப்பு இல்லை என்பது நமது முடிவாகும். ஆனால், மேற்கண்ட லங்கோஜையினி மத்திய ரேகையைப் பற்றி நமக்கு தரவுகளைக் கொடுத்த திரு. வெள்உவன் ஐயா அவர்கள் மகரத் திருப்பத்தில் ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக வாதிடுகிறார். மேலும் அந்த நிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதும் அவரின் வாதம்.

     பஞ்சாங்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வானியல் குறிப்புகளைக் கொண்ட புத்தகங்கள். இதில் உள்ள குறிப்புகளை இன்றைய கணக்கீடுகளின் மூலம் ஆய்வதன் மூலம் நாம் பல செய்திகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் லங்கோஜையினி மத்திய ரேகை தற்போது எங்கே உள்ளது என இன்றைய காலக் கணக்கீட்டின்படி அறிந்து கொள்வோமா? தேசாந்ர சமஸ்காரத்துடன் கூடிய சித்தாந்த திருக்கணிதம் என்னும் சாதக நூலில் லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து பல ஊர்களின் தொலைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருச்சியை எடுத்துக்கொள்வோம். திருச்சி லங்கோஜையினி மத்திய ரேகையிலிருந்து கிழக்கே 560 மைல் தொலைவில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது திருச்சியில் இருந்து 560 மைல்  (901 கிலோ மீட்டர்) மேற்கே இந்த ரேகை உள்ளது. மேலும் இந்த மத்திய ரேகை உஜ்ஜயினியையும் நிரட்ச்சலங்கையையும் இணைப்பதாகும். அதாவது, தீர்க்க ரேகை 75 பாகை வழியே செல்கிறது. இந்த ரேகை திருச்சியில் இருந்து மேற்கே எந்த பாகையில் அமைந்துள்ளது எனக் கணக்கிடுவோம்.

 

நிலநடுக்கோட்டின் நீளம் 

   400,75 கி.மீ   (பூமியின் சுற்றளவு)

360° பாகைக்கு         

   400,75 கி.மீ

1° பாகைக்கு          

  40075÷360 = 111.32 கி.மீ

அதாவது

111.32 கி.மீ           

 1° பாகை

1 கி.மீ         

 1÷111.32 ° பாகை

901 கி.மீ         

  901/111.32 = 8° பாகை (தோராயமாக)

                                

நெடுவரையை நாம் நேர்கோடாகக் கருதிக் கணக்கிட்டு உள்ளோம். ஆனால், அவை வளைகோடுகள் எனவே 8° பாகையில் இருந்து சிறிது வேறுபாடுகள் இருக்கும்.     மேற்கண்ட கணக்கீட்டின்படி மத்திய ரேகை திருச்சிக்கு மேற்கே 8° பாகையில் செல்கிறது என தெரிகிறது. திருச்சியின் தீர்க்கரேகை 78° பாகை. எனவே இந்த மத்திய ரேகை தற்போது 78°-8°=70° பாகையில் செல்லவேண்டும். லங்கோஜ்ஜையினி மத்திய ரேகை உஜ்ஜையினி வழியே செல்வதால் உஜ்ஜையினியின் தீர்க்க ரேகையான 73°பாகை வரவேண்டும். நமக்கு 70° என வருகிறது. தீர்க்க ரேகைகள் வளைகோடுகளாகவும் பழைய குறிப்புகளில் ஊரின் பெயர் மட்டுமே உள்ளது மேலும், அந்தக் காலகட்டத்தில் அவ்வூர் சற்றுத் தள்ளிக் கூட இருந்திருக்கலாம். எனவே இத்தகைய கணக்கீடுகளில் 3° பாகை பெரிய வேறுபாடு அல்ல. முடிவாக இதை இப்படிக் கூறலாம் லங்கோஜையினி மத்திய ரேகை இன்றைய தீர்க்க ரேகை +70° இக்கும் +75° இக்கும் இடையே உள்ளது. இந்த ரேகையின் தென் முனையே நிரட்சலங்கை. ராபர்ட் சீவல் (Robert Sewell) என்பவரால் எழுதப்பட்ட த இந்தியன் காலண்டர் (The Indian Calendar) என்ற புத்தகத்தில் பூஜ்ஜிய அட்சரேகையில் உள்ள நிலப்பகுதியில் இருந்து உஜ்ஜைனியை சேர்க்கும் நெடுவரையைப் பற்றிய குறிப்பு உள்ளது.

(...  Here Lanka is pot es but a place supposed to be on the equator, or in lat. 0° 0 0 on the meridian of Ujjain, or longitude 75 46. It is of great importance to know the exact cast longitude of Ujjain, since upon it depends the verification of apparent phenoment throughout India. Calculation by the different. Siddhidintas can be checked by the best European science if that point can be certainly determined. The great Trigonometical Survey map makes the centre of the city 75° 49' 45" E. long, and 23° 11' 10 N. lat. But this is subject to two corrections; first, a corrention of 1' 0 to reduce the longitude to the origin of the Madras Observatory taken as 80° 17' 21",  and secondly, a farther reduction of 2' 30 to reduce it to the latest valuc, 80° 14' 51", of that Observatory, total 3' 39. This reduces the H. long, of the centre of Ujjnin city to 75° 46' 06. I take it therefore, that amidst conflicting authorities, the best of whom vary from 75° 43' to 75° 51, we may for the present accept 75° 46' as the nearest is found to exist between the new fixture and 80° 14' 51", that difference applied to 75° 40' will give the correct value of the approach to the truth. The securacy of the base, the Observatory of Madras, will before long be again tested, and whatever difference E. long, we require.  The Indian Calendar - Robert Sewell , Sankara Balakrishna Dikshit)

 

அட்ச ரேகை

தீர்க்க ரேகை

இன்றைய உஜ்ஜையினி நகரம்

 23°30' N

 73°14'E

பஞ்சாங்கங்களின்படி மத்திய ரேகை

0° - 23°30'

 70°14'E

நமது கணக்கீட்டின்படி நிரட்ச்சலங்கை

 0°

 73°14'E

 நிரட்சலங்கையின் இருப்பை மேற்கத்திய ஆய்வாளர்களின் கூற்று உறுதிச் செய்கிறது. 

 அலெக்ஸாண்டர் கோந்தரதோவ் என்ற ருஷ்ய எழுத்தாளர் தன்னுடைய ‘Riddles of three Oceans' என்ற நூலில் இலங்கையைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.

     "நிலப்பரப்புகள் பற்றிய புதியகண்டுபிடிப்புகளைக் குறித்து எழுதும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் பண்டைக் கிரேக்கர்களும் ரோமர்களும் அறிந்திருந்த 'தாமிரபரணியை’ இன்றைய இலங்கை என்று நம்புகிறார்கள் ஆனால் தாமிரபரணியைப் பற்றி பல விளக்கங்கள் இன்றைய இலங்கையோடு பெரும்பாலும் பொருந்தவில்லை. மேலும் தொன்மையான குறிப்புகள் பல தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எவரொருவரும் தாமிரபரணியை இதுவரை கடல்வழியாகச் சுற்றி வந்ததாகத் தெரியவில்லையாதலால் அது ஒரு தீவாக இருக்க முடியாது. ஆனாலும் அது வேறொரு உலகத்தின் தொடக்கமாகவும் புவிக்கோளத்தின் எதிர்ப்பக்கம் வாழ்பவர்களுடைய நிலத்தின் வடக்கு விளிம்பாகவும் இருக்கலாம் என்பதாகக் கிப்பர்க்கஸ் (Hipparchus) குறிப்பிடுகிறார்.

 (...Most historians of geographical discoveries believe Ceylon to be the place that was known to the Greeks and Romans as Taprobane. But there are many features in the description of Taprobane that do correspond to what we know about Ceylon. Taprobane is mention in very old sources. Hipparchus noted that no one hade yet circumnavigated Taprobane so that it might very well have not been an island but the beginning of another world the northern edge of the lands of those living opposite....)

     தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுகிறார். இத்தீவு தென்கோளரையில் இருந்ததையே இது புரிய வைக்கிறது. ஆனால் இன்றைய இலங்கையோ வடக்கு அட்சரேகை 5இக்கும் 9இக்கும் இடையே அமைந்திருக்கிறது.

 (...Pliny said that on Taprobane the shadows fell to the south instead of north, and the sun rose in the left and set on the right. This means the island was in the southern Hemisphere. Yet Ceylon is situated roughly between 5 degree and 9 degree north....) “

(The riddles of three Oceans P. 169-170)

     வடஅரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று வடக்கே விழும், மேலும் சூரியன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மறையும். தென்அரைக் கோளத்தில் இருப்பவர்களின் நிழல் சற்று தெற்கே விழும், மேலும் சூரியன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறையும். தாமிரபரணியில் நிழல்கள் வடக்கு நோக்கி விழுவதற்கு மாறாகத் தெற்கு நோக்கி விழுகின்றன. கதிரவன் இடப்பக்கம் தோன்றி வலப்பக்கம் மறைகிறது என்று பிளினி கூறுவதிலிருந்து அது தெற்கு அரைக்கோளத்திலுள்ள நிலத்தைக் குறிக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலம் நாம் கூறும் நிரட்சலங்கையை ஒட்டிய தெற்கே இருந்த நிலப்பகுதியாக இருக்கவேண்டும்.

     லங்கா என்ற சொல்லை மேலைநாட்டார் சிலோன் என்றே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனாலேயே இன்றைய இலங்கை பண்டைய ரோம கிரேக்கக் குறிப்புகளோடு பொருந்தவில்லை. அவர்களின் குறிப்புகளிலிருந்து இலங்கையைத் தாமிரபரணி (Taproboni) என்றே குறிப்பிட்டடுள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.  பஞ்சாங்கத்தின் மற்றொரு குறிப்பில் நிரட்சலங்கை என்ற இடம் பூஜ்யம் பாகையில் (நிலநடுக்கோடு) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரட்சம் என்ற சொல்லிற்குப் பூகோள சம ரேகை என்று தமிழ்மொழி அகராதி என்று பொருள் சொல்கிறது. (நிராசை - ஆசை இல்லாமல், அட்சம் - அட்சரேகை, நிரட்சம் - அட்சம் பூஜ்ஜியமான,  நிரட்சலங்கை - பூஜ்ஜிய அட்சரேகையில் அமைந்த இலங்கை என அழைக்கப்பட்ட நிலப்பரப்பு). அலெக்சாண்டர் கோத்திரத்தோவ்வின் கூற்றையும் இணைத்துப் பார்க்கையில் அவர் லங்கா என குறிப்பிடுவது நிலநடுக்கோட்டின் மேலிருந்த நிரட்சலங்கை என்ற தீவையே என்றும், அது தற்போதைய மாலத்தீவுக்கு சற்று தென்கிழக்கே நிலநடுக்கோட்டின் மீது இருந்தது என்றும் முடிவுக்கு வரமுடியும்.

     இதை உறுதி செய்ய மேலும் சில தரவுகளைப் பார்ப்போம். கில்பர்ட் சிலேட்டர் (Gilbert Slater) என்னும் ஆங்கிலேயஆய்வாளர் தமிழர்களின் வானியல் அறிவை "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு (The Dravidian element in Indian culture)"என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதில் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நேரங்களைக் கணிக்க தங்களுக்கென்று தனியான நெடுவரைகளை அமைத்திருந்தனர் எனக் கூறுகிறார். மேலும் தமிழர்கள் தாங்கள் அமைத்திருந்த நெடுவரையில் வானாராய்ச்சி நிலையத்தையும் கட்டமைத்து வானாய்வு செய்துள்ளனர் என தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். 

 அப்புத்தகத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்.

             வான் மண்டலம் பன்னிரண்டு மனையகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞாயிறு ஒரு புது மனையகத்தில் புகும் நேரம் காலையாயினும் சரி, நண்பகலாயினும் சரி, இரவாயினும் சரி, அந்தக் கணத்திலேயே மாதம் பிறக்கிறது. நாட்களும் ஞாயிற்றெழுச்சியுடன் தொடங்குகிறது. ஆனால், ஞாயிற்றெழுச்சி என்பதும் இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் ஞாயிறு தோன்றும் வேளையன்று; 1 உலக நடு நேர் கோட்டில், 2 நடுநிரைகோடு' அக்கோட்டுடன் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கில் ஞாயிறெழும் வேளையாகவே அது அமைந்துள்ளது. தமிழர் தமக்கென்று வகுத்த இந்த நடுநிரைகோடு தமிழர் பண்டை வானாராய்ச்சி நிலையம் அமைந்திருந்த இடத்துக்கு நேராயிருந்ததாக அறிகிறோம்.

 [¹ Equator.  2 Meridian.]

     உலகின் இத்தனியுயர் சிறப்புக்குரிய ஆண்டுக் கணிப்புமுறை தமிழருக்கு எப்போது ஏற்பட்டது என்று எவரேனும் காலவரையறை கண்டுணர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது தனியுயர் சிறப்புடைய தென்பதும், நடை முறையில் எவ்வளவு வசதிக்கேடாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அம்முறை  இடைச் சங்கங்கள், கடைச் சங்கங்கள் இருந்து நடைபெற்ற தமிழகப் பகுதி இன்று கடலுளாழ்ந்துவிட்டது. அதில் ஒரு பண்டைத் தலைநகரமே தமிழரின் இவ்வாராய்ச்சிக்குரிய மூல இடம் என்று கருதலாம். அது பஃறுளி ஆற்றின் கரையிலிருந்த தென்மதுரை என்று கருத இடம் உண்டு. ஆண்டுத் தொகுப்பில் கணிக்கப்பட்ட நிலையில் அது குமரிமுனைக்குத் தெற்காகவும் இலங்கைக்கு மேற்காகவும் கடலில் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுவதாயுள்ளது.

 பிடிவாதமாகப் பின்பற்றப்படுகிறது என்பதும், மற்றெல்லா ஆண்டுத்தொகுப்பு முறைகளையும் விட அது துல்லியமான வானிலைக் கணிப்பைக் குறியாகக்கொண்டுள்ளது என்பதும் தனிப்படக் குறிப்பிடத்தக்கன. இந்தியாவிலேயே, திராவிடமல்லாப் பண்புகளின் தலையீடில்லாத பகுதியிலேயே - அதாவது தமிழகத்திலேயே - திராவிட அறிவுநூல்கள் முழுத் தற்சார்புடன் தொடர்ச்சியான வளர்ச்சிபெற்றிருந்தன என்பதை இது காட்டுகிறது.

     இதுவரை வேதங்களிலுள்ள திராவிட நகரங்கள், திராவிடக் கலைகள் ஆகியவை பற்றிய சில குறிப்புகள் தவிர, திராவிட நாகரிகத்தின் தொல்பழமைக்கு முடிவான சான்றாக மதிக்கக்கூடிய எதையும் நாம் குறிப்பிடவில்லை. ஆயினும் தென் இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாகரிக மையங்களுக்கும் இடையேயுள்ள தொல்பழந் சான்றுகள் ஏராளமான தொடர்புகளைப்பற்றிய ஜி. எலியட் சுமித்,' வில்ப்ரிட் எச். ஷாப்', ஜே. வில்ப்ரிட் ஜாக்ஸன்', டப்ளியூ. ஜே. பெரி' முதலிய பலரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் காணலாம். இவ்வெல்லா ஆராய்ச்சியாளர் முடிபுகளையும் பொதுமுறை வாசகர்களுக்கு எளிதாகத் திரு. பெரி “ஞாயிற்றின் சேய்கள்” என்ற தம் நூலில் தொகுத்துரைத் துள்ளார்.

[1. G. Elliot Smith, 2. Wilfrid H. Schoff, 3. J. Wilfrid Jackson,.4. W, J. Perry, 5. Logan's Classic, District Manual of Malabar.] ] “

     தமிழ்நாட்டுக்குக் கீழே நடுவரையில் தமிழர்கள் சூரியனை ஆய்வுசெய்யும் வான்ஆய்வு மையத்தை கட்டியிருந்தனர் என கில்பர்ட் சிலேட்டர் கூறுகிறார்.

நிலநடுக்கோட்டின் மீதும் நெடுவரையின் மீதும் அமைந்த பண்டைய தமிழர்களின் வான் ஆய்வு மையங்கள் நிரட்சலங்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை தற்போது எங்கேயுள்ளன என நாம் பார்க்கலாமா?

     பண்டைய தமிழர்கள் கட்டமைத்த சூரிய ஆய்வு நிலையங்கள் இன்றைய மாலத்தீவிற்கு அருகே தென்கிழக்கில் தற்போது கடலில் மூழ்கியுள்ள தீவுவுகளில் இருக்கவேண்டும்  என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ஆய்வு மையங்கள் என்றால் சூரியனின் நகர்வுகளை ஆண்டு முழுவதும் பார்ப்பதற்கு ஏதுவான கட்டட அமைப்பும், செங்குத்தாக நட்டுவைக்கப்பட்ட குச்சியின் நிழலை துல்லியமாக அளக்க ஏதுவான அமைப்புகளும் என நாம் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்தக் கட்டட அமைப்பு சூரியனின் வட, தென் செலவுகளை துள்ளியமாகக் கணிக்க கிழக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

     இன்றைய மாலத்தீவு குமரிக் கடலில் உள்ள பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுநாடாகும். மாலேயை தலைநகராகக் கொண்ட இந்நாடு தமிழ்நாட்டின் தென்மேற்கே நிலநடுக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது.

  "கடலுக்கு கீழ் ஒரு நீண்ட மலைத்தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப் பகுதியாக இருந்தது என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்கிறார்கள் என்பதையும், அங்கு நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அங்கு வழங்கப்படும் மொழி, கலாச்சார, வாய்மொழி, ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே கிமு 300 இக்கு முன்பே மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றனர் (மாலன், புதிய தலைமுறை, பிப்ரவரி 2012 மாதஇதழ் பக்கம் 24)."

     மாலத்தீவுகளில் தொல்பொருள் ஆய்வு ஹெச். சி. பீ. பெல் (Harry Charles Purvis Bell) என்பவர் செய்த ஆய்விலிருந்து தொடங்குகிறது. அவரது ஆய்வில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்றும், பௌத்தம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை தொடர்ந்தது என்றும் தெரியவந்தது.

     1980 இல் மாலத்தீவு அரசு தொல்பொருள் ஆய்வு செய்ய ஏயெரத்தாள் (Thor Heyerdahl) என்ற நார்வே நாட்டு ஆய்வாளருக்கு அனுமதி அளித்தது. மாலத்தீவில் இஸ்லாம், பௌத்தத்திற்கு முந்தைய கலாச்சாரம் ஒன்று அங்கிருந்ததை ஏயெரத்தாள்  கண்டுபிடித்தார். அவர் ஆய்வின்படி கி.மு. இரண்டாயிரம் காலப்பகுதியிலேயே மாலத்தீவு கடல்வழி வணிகத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அவரின் கருத்துப்படி “சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே” மாலத்தீவின் பூர்வ குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் கிழக்கு நோக்கியே உள்ளன. தீவாக இருப்பதால் கட்டிடப் பொருள்கள் தட்டுப்பாடுக் காரணமாக புதியக் கலாச்சாரங்கள் தோன்றும்போது பழையக் கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்தின் மீது புதியக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பள்ளிவாசல்கள் சூரிய வணக்கக் கோயில்கள் மீது எழுப்பப்பட்டுள்ளன என ஏயெரத்தாள்பதிவு செய்தார். 

     ஏயெரத்தாள் சூரிய வணக்கக் கோயில்கள் என்று கருதியவை பண்டைய தமிழர்களின் சூரிய ஆய்வுக் கூடங்கள் ஆகும். தீவுகளின் நடுவே கிழக்கே சூரியனின் எழுச்சியைப் பார்க்க ஏற்றவாறு அமைக்கப்பட்ட இந்த ஆய்வகங்களில் இருந்து பண்டையத் தமிழர்கள் சூரியனின் நகர்வுகளை உற்று நோக்கி, சூரியனின் வடசெலவு, தென்செலவு காலங்களை அளந்து, சூரிய நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய மாலத்தீவிற்குச் சற்றுத் தென்கிழக்கே கடல் மட்டம் குறைவாக உள்ள நிலநடுக்கோட்டின் மீது 'நிரட்சலங்கை' இருந்திருக்கிறது. தற்போதைய மாலத்தீவின் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானங்களைப் போல் இங்கும் சூரியஆய்வு கூடத்திற்கான கட்டுமானங்கள் கிடைக்கக்கூடும். இனிவரும் காலங்களில் அங்கு கடலாய்வு செய்தால் அத்தகையக் கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படலாம். ஏயெரத்தாளின் இந்த ஆய்வு முடிவை மற்ற ஆய்வாளர்கள்  ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், சூரிய வணக்கம் செலுத்திய கடலோடிகள் என்பது வரை சரியாகப் பயணித்தவர் பின்னர் தடம் மாறிவிட்டார். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டக் கட்டிடங்களைப் பார்த்தவர் அவை சூரியனை ஆய்வுச் செய்ய ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் சூரியனை வணங்கிய மக்கள் எழுப்பியக் கட்டடங்கள் எனப் புரிந்து கொண்டார். அதனால் சூரிய வணக்கத்தைக் கொண்டிருந்த அஷ்டக்குகள், மாயன்கள் போன்றவர்களுடன் தொடர்புபடுத்தி தனது ஆய்வை வேறு திசையில் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அவரின் இந்த மிகப்பெரியக் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களின் கவனத்தைப் பெறாமல் போய்விட்டது. இப்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. எவ்வளவோ நிலப்பகுதிகள் இருந்தும் கடலின் நடுவே உள்ள சிறு தீவுகளை ஏன் பழந்தமிழர்கள் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

             வடசெலவு, தென்செலவு ஆகிய சூரியனின் கிடைமட்ட நகர்வுகளை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டில் இருந்து ஆய்வுச் செய்வது இன்றியமையாததாகும். அதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா? கிழக்கு, மேற்காக 'அ', 'ஆ',  'இ' என மூன்று குத்துக் கோடுகள் போடப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்துக் கொள்ளுங்கள். நாம் கிழக்கு நோக்கி நிற்பதாகக் கொள்வோம். சரியான கிழக்கு நோக்கி இருக்கும்போது இடப்புறம் உள்ள 'அ'  கோடு வடக்கேயும் வலப்புறம் உள்ள 'இ' கோடு தெற்கேயும் இருக்கும் அல்லவா? இப்போது ஒருவர் கோடு 'அ' விலிருந்து கோடு 'இ' யிற்கு கிடைமட்டத் திசையில் நகர்ந்துப் போவதாகக் கொள்வோம். கோடு 'அ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து தெற்கே "போனது" போலவும், கோடு 'இ' யிலிருந்து பார்க்கும்போது வடக்கில் இருந்து தெற்கே "வந்தது" போலவும் தெரியும். அதுவே கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும்போது அவர் வடக்கிலிருந்து "வந்து" பின்னர் தெற்கு நோக்கி "போனது" போலத் தெரியும். நகர்பவரைச் சூரியனாகக் கருதினால் நடுவில் உள்ள கோடு 'ஆ' விலிருந்து பார்க்கும் ஒருவருக்குச் சூரியன் வடக்கேயும், தெற்கேயும் பயணிப்பது தெரியும். பூமியில் கடகரேகைக்கும், மகரரேகைக்கும் இடையே நிலநடுக்கோடு உள்ளது. சூரியனின் நகர்வை நுட்பமாகக் கணிக்க நிலநடுக்கோட்டின் மீது இருப்பது இன்றியமையாதது. எனவேதான் நாட்காட்டியையும், நெடுவரைகளையும் உருவாக்கிய பண்டைய தமிழர்கள் சூரியனின் நகர்வை நுட்பமாக அளக்க நிலநடுக்கோட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இன்றைய தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் நிலநடுக்கோட்டு நிலப்பகுதி 'நிரட்சலங்கையே' எனவே தங்களின் சூரிய ஆய்விற்கும், நெடுவரைக்கும் நிரட்சலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

                                                                                                                       - பாலா பாரதி