ஆனி மாதம் 6 ஆம் தேதி சூரியன் தனது தென்செலவை ஆரம்பிக்கும் (Summer Solstice Day) நாள். சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தென்செலவு (தட்சிணாயனம்) என்கிறோம். ஆடி முதல் நாள் தென்செலவை ஆரம்பிக்கும் சூரியன் மார்கழிக் கடைசியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தை முதல் நாள் தனது வடசெலவை ஆரம்பிக்கிறது என மரபு வழிக் கூறுவர். ஆனால் உண்மையில் தென்செலவை ஆனி 6 ஆம் தேதியே தொடங்குகிறது. திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவெள்ளறை கோயில். இக்கோயிலில் உத்திராயண, தட்சணாயன வாயில்கள் உண்டு. ஆடி ஒன்று அன்று தட்சணாயன வாயில் திறக்கப்படும். மார்கழிக் கடைசி வரை திறந்திருக்கும். அதேபோல தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாயில் திறக்கப்படும். வானியலை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக் கோயில் கட்டுமானம் இது. அன்றைய சூரிய நகர்வைக் கொண்டு வட, தென் செலவுக் காலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் தமிழ் நாட்காட்டி 23 நாட்கள் முன்னோக்கிச் சென்றுவிட்டதால் தென்செலவு ஆடி ஒன்றில் ஆரம்பிக்காமல் ஆனி 6 இல் ஆரம்பிக்கிறது.



No comments:
Post a Comment