Sunday, 31 December 2023

மேகலா நகரங்கள்

உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு நடுவரையை முதன்முதலில் அமைத்த தமிழர்கள் இதற்கென நான்கு நகரங்களை நிலநடுக்கோட்டின் மீது அமைத்தனர். அந்நகரங்களே மேகலா நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்திராசுவம் ஆகிய நான்குமாகும். மேகலா நகரங்கள் குறித்து திரு. வெள்உவன் அவர்கள் தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் என்னும் நூலில் விரிவாகப் பேசுகிறார்.

     லங்காபுரி (நிரட்சலங்கை), ரோமகபுரி, சித்தபுரி,  பத்திராசுவம் ஒன்றுக்கொன்று 90° பாகையில் மேகலா ரேகையில் (நிலநடுக்கோட்டில்) அமைந்த இடங்களாகும். மயனுடைய சூரிய சித்தாந்தம் என்ற நூலில் இந்நான்கு நகரங்களைப் பற்றிய மிக விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன என டாக்டர்.ஆர்.ஆர். கார்னிக் தன்னுடைய "Mayan and Surya Siddhandha, Mayans on the high seas" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

     "புவிக்கோளத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒரே விதத்தில் கதிரவன் ஒளிர்வதில்லை. எனவேதான் இடத்திற்கு இடம் காலவேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதை விளக்க, மயன் 90° பாகை இடைவெளிகளில் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தான். இந்நான்கு இடங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவை கிழக்கிலிருந்து தொடங்கி பத்திராசுவ கண்டத்தில் ஏமகூடம், பரத கண்டத்தில் லங்காபுரி, கேதுமால் கண்டத்தில் ரோமகபுரி, குருகண்டத்தில் சித்தபுரி என நான்காகும்".

     (To demonstrate further the sun does not shine on all the earth at the same time and that there is a delay in the local time all the world. Mayasura selects four places are separated by 90 degrees. It is to be noted that all these four places are seaports. The places starting from the east the Yamakodi in land called Bhadrasva, then Lanka land called Bharata then Romaka in land called ketumala, and then Siddhapuri in land called Kuru) (சூரிய சித்தாந்தம் xxii-38-39-40)

     'பத்ராசுவக் கண்டத்தில் கதிரவன் உச்சியில் இருக்கும் போது, பரத கண்டத்தில் எழுகிறது. கேதுமாலக் கண்டத்தில் நள்ளிரவும் குருகண்டத்தில் கதிரவன் மறைவும் நிகழ்கிறது. நண்பகல், கதிரவன் எழுச்சி, நள்ளிரவு, கதிரவன் மறைவு என்ற இந்தச் சுழற்சி பரதகண்டத்தை நடுவாகக் கொண்டு உலகம் முழுவதும் கணக்கிடப்படுகிறது என்று சூரியசித்தாந்தம் விளக்குகிறது’.

     (inxxiiiin xxii-70-71 it states when sun is over head in Bhadrasva, it is just rising in Bharata, it is midnight in Ketumala and set in kuru. The cycle of Miday, sun rise, mid night, and sun set rotates from Bharata and rotates (round the world)

     புரி என்ற சொல் பட்டினம் (கடற்கரை நகரம்) என்று பொருள் கொள்ளும். மேகலா நகரங்கள் எனக் குறிப்பிட்டப்படுகின்ற நான்கு நகரங்களும் துறைமுகங்களாக இருந்தன என்பதைச் சூரிய சித்தாந்தக் குறிப்புகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைய கிரீன்விச் மைவரைக் கணக்குப்படி கிழக்கு 75-76 பாகைகளுக்கு இடையில் இந்து மாக்கடலில் இலங்காபுரியும், மேற்கு 14-15 பாகைக்கு இடையில் தென் அட்லாண்டிக் கடலில் உரோமகப்புரியும் மேற்கு 104-105 பாகைக்கு இடையில் தென்பசிபிக் கடலில் சித்தபுரியும், கிழக்கு 165-166 பாகைக்கு இடையில் கிரிபதி தீவுக் கூட்டங்களுக்கு அருகில் பத்திராசுவமும் இருந்திருக்க வேண்டும் என்பதைச் ‘சூரிய சித்தாந்தம்’ உணர்த்துகிறது. இந்நான்கு மேகலா நகரங்களும் கடலுள் மூழ்கி விட்டன.

     லங்கோச்சயினி மத்திய ரேகை என்று சொல்லிலிருக்கிற உச்சயினி நகரம் கடகத் திருப்பத்தில் இருக்கிறது. மேலும் இந்த உச்சயினி நகரம் இந்திய வான இயலில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது தெரிந்தது. அந்தச் சொல்லில் வரும் இன்னொரு நகரமான இலங்கா மகரத் திருப்பத்தில் இருந்திருக்கிறது என்பதை அந்தச் சொல்லமைப்பின் அடிப்படையிலேயே நாம் உய்த்துணர முடியும். மகரத்திருப்பத்தின் இலங்கையையும் கடகத்திருப்பத்தின் உச்சயினியையும் இணக்கிற மைவரையையே ‘லங்கோச்சயினி மத்திய ரேகை' என்று குமரிக்கண்டத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'ஞாலத்தின் நடுவரையுடன் ஒரு குறிப்பிட்ட மைவரை சேர்கின்ற இடத்தை வைத்தே ஞாயிறு எழும் வேளையைத் தமிழர்கள் கணக்கிட்டு வந்தனர்' என்று "இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு" என்ற தன் நூலில் கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது. லங்கோச்சயினி மைவரை நிலநடுக்கோட்டை வெட்டுமிடத்தில் அமைந்திருந்த நகரமே ஐந்திரக் குறிப்புகளில் 'நிரட்சலங்கை' என்று குறிப்பிடப்படுவதும் மேகலா நகரங்களில் ஒன்றுமாகிய இலங்காபுரியே.


                உலகமெங்குமுள்ள நிலப்பரப்புகளின் நேரங்களைக் கணிக்கவென்றே ஒரு மைவரையை முதன்முதலில் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்களே. அவர்கள் அமைத்த அந்த மைவரையின் அடிப்படையில் தான் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகர் இலண்டன் அருகில் உள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் நிரைவரையை, மைவரையாக்கி அதனடிப்படையில் உலகநாடுகளின் நேரங்களை வரையறுத்துள்ளனர். உலகத்திணைப் படத்தில் குமரிமுனைக்குத் தெற்கே 75டிகிரி கிரீன்விச் கிழக்கு நிரைவரையை ஒட்டித் தென்முனை வரை நீண்டு பரந்த கடல் பகுதியின் ஆழம் 600 அடிக்குட்பட்டதாகவே குறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பகுதிகள் குமரிக்கண்டம் சிறுகச் சிறுகக் கடலில் மூழ்கியபோது இறுதியில் மூழ்கியவை என்பது புலனாகிறது.

     மகரத்திருப்ப இலங்காவையும் அதைச் சார்ந்த பெரும் நிலப்பரப்பையும் தான் உரோம, கிரேக்கர்கள் பழங்குறிப்புகளில் தாமிரபரணி என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதை நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதைத்தான் தமிழிலக்கியங்களும் தென்னிலங்கை எனச் சொல்லிச் சிறப்பிக்கின்றன. எனவே இந்தப் பகுதியே இராவணன் ஆண்ட ‘தென்னிலங்கை'யாக இருந்தல் வேண்டும் என்பது தெளிவு. தமிழ் மொழி அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையைத் தென்னிலங்கையாகவும் இலங்காபுரியை நிரட்சலங்கையுமாகவும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

     தென்னிலங்கை பற்றிய தேடலுக்கு அடிப்படையாய் அமைந்தவை ஐந்திரத்தில் வரும் ‘லங்கோச்சயினி' மற்றும் 'நிரட்சலங்கை' என்கிற சொற்கள் தாம். இவை குமரிக்கண்டத் தமிழர்களின் வான இயல் குறித்த மிகச்சிறப்பான பதிவுகள் என்பதில் ஐயமில்லை. இவை மட்டுமல்ல ஐந்திரங்களின் முதன்மைப் பகுதியில் இருப்பவை முற்றிலும் வான இயல் செய்திகளே. அச்செய்திகளுக்கும் கணியத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்டைத்தமிழர்களின் வான இயல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்திரங்களிருந்து வான இயலுக்குப் பொருந்தாத குப்பைக் கூளங்களை அகற்றிவிட்டு அவற்றை ஆய்வு செய்தல் இன்றியமையாதது. தமிழர் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளில் நாட்டமுள்ளோர் இதில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும்.

 (தென்னிலங்கை, மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் - வெள் உவன்)

                                                                                                                                         - பாலா பாரதி 


No comments:

Post a Comment